கேரளாவில் தொடரும் கனமழை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு
1 min readHeavy rains continue in Kerala – 11 people have lost their lives so far
25.5.2024
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.