ஆலங்குளம் தியேட்டருக்கு வந்த நடிகர் ராமராஜன் பேட்டி
1 min read
Interview with actor Ramarajan who came to Alankulam theatre
11.5.2024
சாமானியன் படம் திரையிட்டுள்ள ஆலங்குளம் டி.பி.வி. மல்டி பிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றிய நடிகர் ராமராஜன், தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
நடிகர் ராமராஜன் பல ஆண்டுகளுக்கு பிறகு நடித்த சாமானியன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஆலங்குளம் அம்பை சாலையில் உள்ள டி.பி.வி. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 25வது நாளை நோக்கி இத்திரைப்படம் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ராமராஜன் நேற்று (திங்கள்) ஆலங்குளம் டி.பி.வி. மல்டி பிளக்ஸ் தியேட்டருக்கு வருகை தந்தார். தியேட்டருக்கு வருகை தந்த ராமராஜனை, உரிமையாளர் டி.பி.வி.கருணாகரராஜா, அவரது மனைவி வி.எஸ்.பரிபூரணம், மகன் வி.எஸ்.திவாகர், டி.பி.வி.வைகுண்ட ராஜா, அவரது மனைவி வி.சசிகலா ரோஜாரமணி, மகன் தொழிலதிபர்கள் விபின் சக்கரவர்த்தி, நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வரவேற்று நினைவு பரிசு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 2.30 மணி காட்சியில் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய அவர், படம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார். ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ரசிகர் மன்ற தலைவர் சுப்பையா, பெத்தநாடார்பட்டி கண்ணன் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவருக்கு ஆளுயர ரோஜா பூ மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இப்படத்தின் 25வது நாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராமராஜன் கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய சாமானிய மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருகை தர இயலாமல் போய் விடுகிறது. பொதுமக்களுக்கு உள்ள பொழுதுபோக்குகளில் முக்கியமானது சினிமா தான். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும், அதன் உரிமையாளர்கள் முதல் 3 முன் வரிசையில் மட்டுமாவது கட்டணத்தை குறைத்தால் தியேட்டருக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழை, எளிய மக்களும் தங்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவர். ஆலங்குளம் டி.பி.வி. மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நாளை (இன்று ) முதல் எனது சாமானியன் படத்திற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என உரிமையாளர் கூறியுள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.