எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி: அண்ணாமலை பேட்டி
1 min read
Edappadi Palaniswami is a betrayer of faith: Annamalai interview
5.7.2024
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. அப்போது இருந்தே அதிமுக – பாஜக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக வார்த்தை யுத்தம் நடத்தி வருவதை பார்க்க முடிகிறது.
அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜகவுக்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசி வருகிறார் அண்ணாமலை. பாஜக தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்” என காட்டமாக பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்கிரவாண்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இல்லை. பீகாரில் அனுமதி இருக்கும்போது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி இல்லையா?. அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. சுயலாபத்திற்காக, அதிகார வெற்றிக்காக அதிமுகவை அழித்து கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி. அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுக்கிய எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார்.
ஈரோடு இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது ஈரோடு என்னுடையை கோட்டை; அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அவரிடம் கூறுங்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார். தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்கள் கண்டிபிடித்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டமே வருவதில்லை. முன்பு இருந்ததுபோல் இல்லை; அதிமுக சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. தலைமை சரியில்லாததால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019-ம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்திக்கிறது. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை ஈபிஎஸ்க்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.