தூத்துக்குடி மீனவரை புதைத்த கும்பல்- 15 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு
1 min read
Gang buried Thoothukudi fisherman- body exhumed after 15 days
5.7.2024
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கணேஷ்வரி. இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மாரிசெல்வம் என்ற அசால்ட்(வயது 24). மீனவர்.
இந்நிலையில், கடந்த 21-ந் தேதி மாரிசெல்வம் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரி மாரீஸ்வரி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது மகனுக்கு 3 சிறுவர்களால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அவரது தாய் கணேஷ்வரி கலெக்டர் அலுவலத்திலும் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடந்த 20-ந் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரிசெல்வம் அதில் ஒருவரது செல்போனை பறித்து அதனை கடலில் வீசி உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அன்று இரவு மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
மாரிசெல்வம் கடந்த 21-ந் தேதி திரேஸ்புரம் பகுதியில் வந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடி உளளார். எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி செங்கற்களால் தாக்கி உள்ளனர்.
இதில் மயக்கம் அடைந்த அவரை அந்த கும்பல் கை, கால்களை கட்டி அங்கேயே குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர். இந்நிலையில் மாரிசெல்வம் புதைக்கப்பட்ட இடத்தை அந்த சிறுவன் அடையாளம் காட்டினான்.
கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் மாரிசெல்வத்தின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.