போலி அடையாள அட்டை வைத்து மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
1 min read
Policeman involved in fraud with fake identity card arrested
15.7.2024
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் காட்டுவிளையை சேர்ந்தவர் சேகர் (வயது 54). 1993-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இவரது நடத்தை சரியில்லாததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணி ஓய்வு கொடுக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.
அதன்பிறகு சேகர், போலீஸ் உயர்அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பொதுமக்களை ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், அதிரடியாக சேகர் வீட்டுக்குச் சென்று விசாரணையில் இறங்கினர். அங்கு சோதனையும் நடத்தினர்.
அப்போது வீட்டில் உதவி ஆய்வாளர் சீருடையில் இருக்கும் போட்டோ, நெல்லை போலீஸ்காரர் சுரேஷ் என்ற பெயரிலான அடையாள அட்டை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் என்ற பெயரிலான அடையாள அட்டை போன்றவை கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சேகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.