தென்காசியில் அஞ்சல் துறை சேவைகள் – சேமிப்பு திட்டங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Postal Services in Tenkasi – Saving Schemes Awareness Program
24.7.2024
தென்காசியில் அஞ்சல் துறையின் புதிய சேவைகள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் தென்காசி உபகோட்ட ஆய்வாளர், ராமசாமி, தென்காசி தலைமை அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி வட்டார கல்வி அலுவலர் இள முருகன், தென்காசி டாக்டர் வேதமூர்த்தி, தென்காசி நகராட்சி 7 வது வார்டு உறுப்பினர் ஆசிக் முபினா, தென்காசி காட்டுபாவா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலக துறையின் சேவைகளை பாராட்டி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் பேசியதாவது :-
இந்திய அஞ்சல் துறை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் சேவைகள் மற்றும் புதிய சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்கள் இருப்பிட பகுதிக்கே சென்று அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று தென்காசி தலைமை அஞ்சலகம் சார்பில் ஒரு அஞ்சலக சேவை விழிப்புணர்வு கூட்டம், தென்காசி காட்டுபாவா நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. அதில் அனைத்து அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள், டிஜிட்டல் சேவைகள், அஞ்சல் துறையிலிருந்து அனுப்பப்பட்டதாக கூறி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ய அனுப்பப்படும் குறுந்தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துக் கூறியதோடு இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து காட்டு பாவா நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்திலேயே சிறப்பு ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தென்காசி அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்துதரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். முடிவில் தென்காசி தலைமை அஞ்சல் அலுவலக போஸ்ட் மாஸ்டர் திருப்பதி அனைவருக்கும் நன்றி கூறினார்.