வயநாட்டில் ராகுல்,பிரியங்கா நேரில் ஆய்வு
1 min read
Rahul, Priyanka in person inspection in Wayanad
1.8.2024
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 291-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கார் மூலம் சென்றடைந்தனர்.
முதல்கட்டமாக சூரல்மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து, வயநாட்டில் உள்ள மேம்பாடி மருத்துவமனைக்கு சென்று, நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இவர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் சென்றுள்ளார்.