2026-ல் நான்கு முனை போட்டி உறுதி-அண்ணாமலை பேட்டி
1 min read
Four-way competition confirmed in 2026-Annamalai
10.8.2024
ஈரோட்டில் தனியார் சார்பில் வருங்கால தலைமுறையினரின் தொழில் முனைவோருக்கான கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் குறைவாக உள்ளது. ஜி.எஸ்.டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் காலாண்டில் மஹாஷ்டிரா 15, உத்திரபிரதேசம் 12, கர்நாடக 9 தமிழகம் 3.3 சதவிகதமாக வளர்ச்சி உள்ளது.
தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது. தி.மு.க அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழகம் ஜி.எஸ்.டி மாநில வருவாய் மைனஸ் 11 பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. தமிழகத்தின் நிலை கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது. 52 சதவிகிதம் ஓட்டு இருந்தால் தனி பெரும்பான்மை ஆட்சியாக கருதப்படும். அந்த காலம் முடிந்து விட்டது. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அரசியல் களம் மாறும். 2026ல் தமிழகத்தில் நான்கு போட்டி உள்ளது. எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள், நல்லவர்கள் வெற்றி பெற முடியும். தமிழக அரசியல், 2026 தேர்தலில் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக நான்கு முனை போட்டி நிலவும். விஜய் வந்தால் தான் சாய்ஸ் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை, 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் புரட்சி இருக்கும். விஜய் வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் கிடைக்கும்.” என்றார்.