காங்கோ சிறையில் இருந்து தப்ப முயன்றபோது மூச்சுத் திணறல், துப்பாக்கி சூட்டினால் 129 கைதிகள் பலி
1 min read
129 inmates die after suffocation, gunfire in Congo prison escape
3.9.2024
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசா அருகே மகலா என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. காங்கோவின் மிகப்பெரிய சிறைச்சாலை இதுவாகும்.
இச்சிறைச்சாலையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 1,500 கைதிகள் வரை அடைக்கும் வசதிகொண்ட இச்சிறைச்சாலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சிறைச்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை சாதகமாக பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். ஒரேசமயத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறை கதவுகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது, கைதிகளுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் கைதிகள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மூச்சுத்திணறலில் மயக்கமடைந்த கைதிகள் பலரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
அதேவேளை, தப்பிச்செல்ல முயன்ற சிறைக்கைதிகள் சிலர் மீது பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் மற்றும் துப்பாக்கி சூட்டில் மொத்தம் 129 கைதிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.