தென்காசி மாவட்டத்தில் கிராமங்களுக்கு புதிய மினி பஸ் வழித்தடம் தேவையா?
1 min read
New Comprehensive Mini Bus Scheme in Tenkasi District
17.9.2024
தமிழகம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து கிராம பகுதிகளுக்கும் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிய விரிவான மினிபேருந்து திட்டம் வரைவு அறிக்கை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் நாளது தேதிவரை போக்குவரத்து வசதி இல்லாத 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதியினை நீட்டித்து வழங்கிட ஏதுவாக தகுதியான வழித்தடங்களைக் கண்டறிந்து அதன் விவரத்தினை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைத்திடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய விரிவான மினி பேருந்து திட்டம், 2024 க்கான நிபந்தனைகள்:
- அதிகபட்ச தூரம் 25கி.மீ க்கு மிகையாக இருக்க கூடாது.
- குறைந்தபட்ச தூரம் 10 கி.மீ க்கு குறைவாக இருக்க கூடாது.
- கண்டறியப்பட்ட வழத்தடத்தின் மொத்த தூரத்தில் ஏற்கனவே பேருந்து/சிற்றூந்து இயக்கப்பட்டு வரும் வழித்தடமானது 30 சதவீதம் TO 35 சதவீதத்துக்கு மிகையாக இருக்கக் கூடாது.
- கண்டறியப்பட்ட வழித்தடத்தின் மொத்த தூரத்தில் பேருந்து/சிற்றூந்து நாளது தேதி வரை இயக்கப்படாத வழித்தடத்தின் நீளமானது 65 சதவீதம் முதல் 70சதவீதத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது.
அதாவது. மொத்த வழித் தடத்தின் தூரம் 10கி.மீ எனில் 3 முதல் 3.5கி.மீ வரையில் ஏற்கனவே பேருந்து இயக்கப்படும் தூரமாகவும் 7 முதல் 7.5கி.மீ வரை பேருந்து இயக்கப்படாத தூரமாகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- ஒரு வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 2முறை மட்டும் பேருந்து/சிற்றூந்து இயக்கப்பட்டு வந்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின்படி நாளது தேதி வரை பேருந்து சிற்றூந்து முறையாக இயக்கப்படவில்லை எனில் அவ்வழித்தடத்தை பேருந்து/சிற்றாந்து இயக்கப்படாத வழித்தடமாக கருதலாம்.
எனவே, தென்காசி மாவட்டத்தில் மேற்படி தகுதியுள்ள வழித்தடங்கள் இருப்பின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தென்காசி அவர்களை நேரில் அணுகி விவரம் தெரிவித்திடுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.