முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பக ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்
1 min read
Muthumalaipuram Evening Study Annual Festival Art Shows, Medical Camp
14.10.2024
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலை புரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பக முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில், அவர் வசித்த குடும்ப வீடானது கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகமாக செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதே போல் அங்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. இம் மைதானத்தில் கட்டணமில்லா மாலை நேர படிப்பக முதலாம் ஆண்டு விழா மற்றும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சரஸ்வதி தேவியின் முன்பு மாணவ, மாணவிகளின் நோட்டு, புத்தகங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாணவர்கள் ஒவ்வொருவராக சரஸ்வதி தேவிக்கு மலர் தூவி வழிபட்டனர். சரஸ்வதி பூஜை கொண்டாடுவது குறித்து மாணவ, மாணவிகள் பேசினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை பால்தாய் சான்றிதழ் வழங்கினார். மேலும் அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
முன்னதாக மாலைநேர படிப்பகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் கிராமத்தில் உள்ள பலரும் பயன்பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார். இதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் சேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், கடையம் பாலன், அழகர், ஜீவா, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.