உமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்: பிரதமர் மோடி
1 min read
Center will work with Omar Abdullah: PM Modi
16/10/2024
ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து சகினா மசூத், ஜாவேத் தார், ஜாவேத் ராணா, சுரிந்தர் சவுத்ரி மற்றும் சதீஷ் சர்மா ஆகிய 5 மந்திரிகள் பதிவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்வதற்கான அவரது முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். மேலும் ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.