2026ல் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு
1 min read
Monarchy should be abolished by 2026; Adhav Arjuna makes sensational speech
6.12.2024
தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பேசப்பட்ட, உற்று நோக்கப்பட்ட நிகழ்வு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச.6) அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விகடன் நிறுவனம் சார்பில் நடந்த விழாவில், விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, தவெக தலைவர் நடிகர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;-
திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்னும்போது, அதற்கு முதல் குரலாக நடிகர் விஜயின் குரல் ஒலித்தது. அவர் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலைவிட்டு இங்கே வந்திருக்கிறார்.
இங்கே சிலர், சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்கின்றனர். ஒரு நிறுவனம் எப்படி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது? தமிழகத்தில் நிலவும் ஊழலையும், மதவாதத்தையும் பற்றி விஜய் பேச வேண்டும்.
வேங்கை வயல் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். ஆனால் சாதி தான் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நடிகர் விஜய் வேங்கைவயல் செல்லவேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி அதில் பட்டியலின மக்களை பங்கேற்க வைக்கவேண்டும். இங்கு மன்னராட்சி நிலவுகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கேட்டால் சங்கி என்கிறார்கள். 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் புதிய அரசியலை மக்கள் உருவாக்க முடிவெடுத்துள்ளனர். பிறப்பால் ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.