சந்திரசூட் அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்?- உருக்கமான விளக்கம்
1 min read
Why didn’t the Chandrachud government vacate the bungalow? – A concise explanation
7.7.2025
அரசு பங்களாவை காலி செய்வது குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இதனிடையே, தனது மகளின் மருத்துவ காரணங்களுக்காக புதிய வீட்டை பிரத்யேகமாக உள்வடிவமைப்பு செய்து வருவதால் தாமதம் ஏற்பட்டதாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, பார் அண்ட் பெஞ்ச் இணையதள செய்திக்கு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது,
“வீடு முழுவதும் உள்ள பொருள்களை புதிய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 நாள்களில் இந்த பணிகள் நிறைவடையும், அதிகபட்சம் இரண்டு வாரங்கள் ஆகலாம்.
எனது இரு மகளுக்கும் 16 மற்றும் 14 வயதாகிறது. அவர்களின் தனியுரிமைக்காக கழிப்பறை மற்றும் வீட்டின் பிற பகுதிக்கு சக்கர நாற்காலி செல்லும் வகையில் புதிய வீட்டை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது.
ஒப்பந்ததாரர் ஜூன் இறுதிவரை உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் எனக் கூறியதால், அப்போதைய தலைமை நீதிபதியிடன் கடிதம் அளித்து தங்குவதற்கு ஒப்புதல் பெற்றிருந்தேன்.
எங்கள் வீட்டில் சிறிய ஐசியூ அமைப்பு உள்ளது. எனது மகளுக்கு நள்ளிரவில் உடல்நிலை மோசமடைந்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மட்டுமே அவளது நிலைமை தெரியும்.
வீட்டிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மாற்ற வேண்டும் என்பதால்தான், 2022 இல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது, இந்த வீட்டுக்கு மாற விரும்பாமல் சிறிய வீட்டிலேயே இருந்தேன். ஆனால், முக்கிய பிரமுகர்கள் பலர் என்னை காண வருவார்கள் என்பதால் மாறினேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.