June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கடித்த கட்டெறும்பு/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

The ant that bit Kannayiram/ Comedy story/ Tapasukumar

10.11.2024
பஸ்விபத்தில் காயம் அடைந்த கண்ணாயிரம் ஜவுளிக்கடைக்காரர் கொடுத்த கடனை கேட்டதால் மனம் பிரண்டு பழைய நினைவுகளை மறந்தார். இருபதிலிருந்து இருபத்தி ஒன்பது வயதுவரை உள்ள நிகழ்வுகள் மட்டுமே நினைவில் இருந்தது. இந்த நிலையில் மேடு பள்ளமான ரோட்டில் ஆட்டோவில் வந்த போது ஆட்டோ கவிழ்ந்ததில் கண்ணாயிரத்துக்கு பழைய நினைவு வந்தது.
இதை அறிந்து ஜவுளிக்கடைக்காரர் வேகமாக வந்து கடன் தொகையைக் கேட்க, கண்ணாயிரம் அதிர்ச்சியில் நின்றார்.
ஐவுளிக்கடைக்காரர் அவரை உலுக்கி, கண்ணாயிரம் எனக்குத் தரவேண்டிய ஐம்பதினாயிரம் பாக்கியை எப்போ தருவ என்று கேட்க, கண்ணாயிரம்.. எந்த ஐம்பதினாயிரம் என்று கேட்க, ஐவுளிக்கடைக்காரர் டென்சனாகி..அடப்பாவி..மறந்திட்டியா..நீ எழுதிக்கொடுத்த சீட்டு எங்கிட்ட பத்திரமா இருக்கு.. ஆமா.. நீ உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நினைச்சி பெண்களுக்கு சேலைவாங்கிக் கொடுத்த வகையில் ஐம்பதாயிரம் ரூபாய் தரணும்.. ஆமா என்றார்.
கண்ணாயிரம்.அப்படியா, தேர்தல் வரும்போது தர்ரேன் என்க, ஐவுளிக்கடைக்காரர்.. தேர்தல் எப்போது வரும் என்க, கண்ணாயிரம் மெல்ல, தேர்தல் வரும்போது வரும் என்று சொல்ல, ஐவுளிக்கடைக்காரர் கோபத்தில், என்ன திருப்பி திருப்பி அதே சொல்லுற.. திருப்பி திருப்பி அதே சொல்லுற என்க.. பூங்கொடி பாய்ந்துவந்தாள். ஏங்க.. ஏற்கனவே ஐவுளிப் பாக்கியைக் கேட்டுத்தான் அவருக்கு பழைய நினைவு மறந்துப் போச்சு,மீண்டும் அதை அவரிடம் கேட்காதீங்க, மறுபடியும் அவருக்கு ஏதாவது ஆகிடப்போகுது என்று சொல்ல, ஐவுளிக்கடைக்காரர்..அப்படி என்றால் என் பணம் எப்போ கிடைக்கும் என்று கேட்க, பூங்கொடியோ.. கவலைப்படாதீங்க.. ஒரு மாசத்திலே நானே தர்ரேன் என்றார்.
அதைக்கேட்ட ஜவுளிக்கடைக்காரர்..ம்.. நீ சொல்லுறதால விடுறேன்.. இல்லாட்டி.. ஒரு வழிப்பண்ணியிருவேன்.. ஆமா..அ டுத்த மாசம் இதே நாளில் வருவேன்.. எனக்கு பணம் கிடைச்சாகணும் என்றவாறு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சுடிதார் சுதா, பயில்வான்,மோட்டார் சைக்கிள் வாலிபர் ஆகியோர் அங்கு வந்தனர். என்ன..கண்ணாயிரம்..பழைய நினைவு வந்துட்டா.. என்னை யாருன்னு தெரியுதா என்று சுடிதார் சுதா கேட்க, கண்ணாயிரம்.. ஆமா தெரியுது.. ஆமா இவ்வளவு நாளும் எங்கே இருந்திய… ஆளையேக் காணம் என்று கேட்டார்.
உடனே பயில்வான்.. அதுவா.. பஸ்விபத்திலே காயம் அடைஞ்சவங்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்க நீதிமன்றத்திலே வழக்கு தொடர்வது சம்மந்தமா அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தோம் என்க..கண்ணாயிரம் ..அப்படியா..அப்போ எனக்கு பணம் கிடைக்குமா என்று கேட்டார். அதற்கு பயில்வான்..சின்னக் காயத்துக்கெல்லாம் கிடைக்காதுப்பா என்று சொல்ல, கண்ணாயிரமோ.. பேப்பரிலே எனக்கு பெரிய காயம்.. உயிர் ஊசல் என்றுதான் போட்டிருந்தாங்களே என்க, பயில்வானோ.. டாக்டர் சர்டிப்பிக்கெட்டிலே என்ன சொல்லியிருக்கோ.. அதுதான் செல்லும் என்றார்.
கண்ணாயிரம்.. அட என்னப்பா..பஸ் விபத்திலே சிக்கிய பிறகு எனக்கு அடிக்கடி பழைய நினைவுகள் மறந்து போகுது.. அதுக்கு நஷ்ட ஈடு கிடைக்காதா என்று அப்பாவியாக கேட்க, அது சரியா தெரியல என்று பயில்வான் சொல்ல, கண்ணாயிரம் சோகமானார்.
அட என்னப்பா பண்ணுறது.. ஜவுளிக்கடைக்காரர் வேற பழைய பாக்கி ஐம்பதாயிரம் கேட்கிறாரு.. அதை எப்படி கொடுக்கிறதுன்னு தெரியல.. என்று கண்களை கசக்கினார்.
எப்படியும் ஒரு வழிப் பிறக்கும் என்று பயில்வான் சொல்ல, அப்படிங்கிறீங்க. .பார்ப்போம் என்று கண்ணாயிரம் சொல்ல, பயில்வான், சுடிதார் சுதா, மோட்டார் சைக்கிள் வாலிபர் அங்கிருந்து சென்றனர்.
அந்த நேரத்தில் கண்ணாயிரத்துக்கு தாமிரபரணி தண்ணீர் நினைவுக்கு வந்தது. ஆமா..பூங்கொடி.. அந்த தாமிரபரணி தண்ணியை கொண்டு வந்தோமே.. எங்கே வச்ச என்று கேட்க, அதுவா..பக்கெட்டிலே மூடி கட்டிலுக்கு கீழே இருக்கு.. போய் பாருங்க என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம் வேகமாக கட்டிலுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தார். மேல் மூடியை திறந்துப் பார்த்தார். தண்ணீர் அப்படியே இருந்தது. என்ன தண்ணீர் வற்றி தாமிரம் கிடைக்குமுன்னு சொன்னாங்க.. இன்னும் வரல.. ஒரு வேளை தாம்பரத்துக்குப் போயிதான் பிரித்தெடுக்கணும் போலிருக்கு…என்று நினைத்தார்.
பிளாஸ்டிக் பக்கெட்டை மூடி கட்டிலுக்கு அடியில் பத்திரமாக வைத்தார்.
பூங்கொடியிடம், நான் தாம்பரத்துக்குப் போகணும்.. என்க, பூங்கொடியோ.. ஏங்க..உங்களுக்கு ஏழரை சனி இன்னும் முடியல.. ஏற்கனவே குற்றாலத்துக்குப் போயிதான் காலில அடிபட்டு வந்தீங்க.. அதனால ஏழரை சனி முடியும்வரை எங்கேயும் போகாதீங்க என்றாள்.
கண்ணாயிரம் கோபமானார். ஏய்.. எனக்கு ஏழரை சனி முடியப் போகுது. அது முடியும்போது சனிபகவான் அள்ளிக்கொடுத்திட்டுப் போவாருன்னு சொல்வாங்க.. அதனால நான் தாம்பரத்துக்குப் போயி.. நான் இந்த தாமிரபரணி தண்ணீரில் உள்ள தாமிரத்தை பிரித்தெடுத்திட்டுவர்ரேன். .நிறைய காசு கிடைக்கும் என்றார்.
பூங்கொடி..அதெல்லாம் வேண்டாங்க..நான் எங்க அப்பாக்கிட்டே வாங்கி ஜவுளிக்கடைக்காரருக்கு பணத்தைக் கொடுக்கிறேன்.நீங்க சும்மா இருங்க என்றாள்.
கண்ணாயிரம் கேட்கவில்லை. நல்ல விசியத்தைக் காக்கப் போயிடக்கூடாது.ஒரு வேளை ரொம்ப நாளாயிட்டா தாமிரபரணி தண்ணியிலிருந்து தாமிரம் காணாமப் போயிடப் போகுது.. நீ யாருக்கிட்டேயும் சொல்லாத..நான் ரெயில்வே ஸ்டேசனுக்குப் போயி டிக்கெட்டு எடுத்திட்டுவர்ரேன் என்றார்.
பூங்கொடியோ, ஏங்க ரெயில் போயி உங்களுக்குப் பழக்கம் இல்ல.. ஏடா கூடமா.. எங்கேயாவது போய் காட்டில இறங்கிடப் போறீங்க.. பஸ்சிலே போங்க என்றாள். கண்ணாயிரம் உடனே.. ஏய்..பஸ் எனக்கு ராசி இல்ல.. ஏற்கனவே பஸ் கவிழ்ந்து காயம் அடைஞ்சேன். நஷ்ட ஈடு கூட கிடைக்கல..அதனால ரெயிலே போறேன் என்றார்.
பூங்கொடி தடுத்தாள். கண்ணாயிரம் கேட்கவில்லை. கொடியில் கிடந்த வேட்டியை எடுத்து உடுத்தார். சட்டையை எடுத்துமாட்டினார். உதறிட்டுப் போடுங்க என்று பூங்கொடி சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. முன்வைத்தக் காலை பின்வைக்க மாட்டேன் என்றபடி ரூபாய் எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டார்.
ரெயில் நிலையத்தை நோக்கி விரைந்தார். டிக்கெட் எடுக்கும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. எந்த வரிசையிலே போய் நிற்பது என்று தெரியாமல் விழித்தார்.
அங்கு நின்றவர்களிடம் தாம்பரத்துக்குப் போகணும்..எந்த வரிசையில் நிக்கணும் என்று கேட்க, ஒருவர் திரும்பிப்பார்த்தார்.
வரிசையில் நின்னா தாம்பரத்துக்கு போகமுடியாது. வரிசையில் நின்னு டிக்கெட்டு எடுத்து ரெயில் ஏறி போனால்தான் தாம்பரம் போக முடியும். போயி அந்த வரிசையில் நில்லுங்க என்று சொல்ல,கண்ணாயிரம் அந்த வரிசையில் கடைசியாகப் போய் நின்றார்.
ஏன் இவ்வளவு கூட்டம்..ரெயில் பெரிய ரெயில்தானே..பிறகு ஏன் இடம் கிடைக்காதா..என்று கேட்க, ஒருவர்..சத்தம் காட்டாம நில்லுய்யா..நானே ஒருமணி நேரமா காத்து நிக்கேன்..வரிசை நகரவே மாட்டேங்குது..நானே கடுப்பிலே நிக்கிறேன். சனி,ஞாயிறுன்னா கூட்டம் இப்படித்தான் இருக்கும். காசு கம்மின்னா கூட்டம் வரத்தான் செய்யும்..பேசாம நில்லும் என்க.. கண்ணாயிரம்,கோபப்படாதீங்க..ரெயில்னா படுத்துக்கிட்டேப் போகலாமுன்னு வந்தேன்.. இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கு..என்க.. ஒருவர்..யோவ்.. ரிசர்வ் பண்ணினாத்தான் படுத்துக்கிட்டுப் போகமுடியும். அந்த டிக்கெட்டு எல்லாம் ஒருமாசத்துக்கு முன்னே விற்றுத் தீர்ந்திருக்கும்.இப்போ அன் ரிசர்வ் டிக்கெட்டுதான் கிடைக்கும். நின்னுக்கிட்டுத்தான் போகணும்..என்க.. கண்ணாயிரம்..என்ன அப்படிச் சொல்லிப்புட்டிங்க..நின்னுக்கிட்டுப் போனா கால் வலிக்குமே என்க..அருகில் நின்றவர்..ஆ..கால்..கால் என்று கத்த, அது உங்க காலா..என்று கண்ணாயிரம் தன் காலைத் தூக்கினார். அப்பாட..ஒரு டிக்கெட் எடுக்க எவ்வளவு பிரச்சினையா இருக்கு..நான் எல்லாம் தியேட்டரில டிக்கெட் எடுக்க..தலைக்கு மேல ஏறிப் போவேன்.. இங்கே ஒண்ணும் முடியாது போலிருக்கு.. டிக்கெட் எடுக்க காத்து நின்றே கால்வலிக்குது.. சீக்கிரம் போங்க..என்று முன்னால் நின்றவரை கண்ணாயிரம் அவசரப்படுத்தினார்.யோவ், தோள் மேல கைவைக்காதய்யா..தொடாம வா என்று முன்னால் நின்றவர் எச்சரிக்க,கண்ணாயிரம்,சரி, தோழரே,சீக்கிரம் போங்க என்றார்.
அவர் முறைத்தபடி முன்னேறினார்.கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது. அப்பாட..இன்னும் பத்து பேருதான் இருக்காங்க..சீக்கிரம் டிக்கெட் எடுத்திடலாம் என்று சொல்ல..தொடையில் ஏதோ கடிப்பது போலிருந்தது. என்ன..எறும்பா..இந்த நேரம் பாத்து கடிக்குது..ஏய் சும்மா இருக்கமாட்ட என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று வேட்டியை ஓங்கி அடித்தார். எறும்பு கடி சற்று நின்றது.ம்..அப்படி அமைதியாக இருக்கணும் ..சரியா என்றபோது சட்டையில் இருந்த ஒரு எறும்பு ஊர்ந்து கழுத்தில் ஒரு கடி கடித்தது. ஆ..என்று அலறிய கண்ணாயிரம் கழுத்தில் கடித்துக்கொண்டிருந்த எறும்பை பிடுங்கி எடுத்து நசுக்கிவெளியே வீசினார்.
என்னா தெனாவெட்டு….என்கிட்ட நடக்குமா..இப்போ அடிபட்டு செத்துப் போனியா..சும்மா இருக்கிறது இல்ல..இப்போ பாரு..அடிபட்டு செத்துப் போயிட்டே..இது தேவையா..என்று சத்தமிட்டபடி நின்றார்.
அருகில் நின்றவர்கள்..கண்ணாயிரத்தை ஒருமாதிரிப் பார்த்தனர்.கண்ணாயிரம் சிரித்துக்கொண்டார்.
இன்னும் மூன்று பேர்தான் நிக்கிறாங்க..போயி டிக்கெட் எடுத்திடலாம் என்று நினைத்தபடி நிற்க..தொடையில் கடித்த ஒரு எறும்பு மேல் நோக்கி முன்னேறுவது தெரிந்தது.என்ன இந்த எறும்பு..இடுப்பை நோக்கி ஓடுது..நான் வேற அவசரத்திலே ஜட்டி வேறப் போடலை..ம்..போகாத..அங்கே போகாத..நான் பொல்லாதவனாகிவிடுவேன்..ம்..ஏய்..ஏய்..ஏய்..ஏய்.ம். கடிக்காத.. அங்கே கடிக்காத.. கடிச்சிட்டு..போச்சு..போச்சு..என்று கண்ணாயிரம் கத்த.. அருகில் நின்றவர் என்னைய்யா.. குஞ்சானை கடிச்சமாதிரி கத்துற.. என்க..ஆமாய்யா..ஆமா..என்று கண்ணாயிரம் கதற..அந்த பாத்ரூமுக்குப் போயி வேட்டியை மாத்திட்டு வாய்யா..போனவாரம் பாம்பு புகுந்தப்போ. அங்கேப் போய்தான் வேட்டியை மாத்திட்டு வந்தேன்..போங்க என்க..கண்ணாயிரம் பாம்பா என்றபடி பாத்ரூமை நோக்கி ஓடினார்.(தொடரும்)
–வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.