அமெரிக்காவில் சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு உயர் பதவி
1 min read
Chennai Tamilian Sriram Krishnan gets high position in America
23.12.2024
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். அதேபோல, விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார்.
தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். முன்னதாக, மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
‘பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்குடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்,’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பை கொடுத்த அதிபர் டிரம்ப்புக்கு ஸ்ரீராம் கிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.