கண்ணாயிரத்தை பயமுறுத்திய எருமை/ நகைச்சுவை கதை /தபசுகுமார்
1 min read
The buffalo that scared Kannayiram/ Comedy story/Tapasukumar
15.2.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றபோது விழுப்புரம் அருகே ரெயில் திடீரென்று கடபுடா சத்தத்துடன் நின்றது.
அந்த சத்தத்தைக் கேட்ட ஒருவர், அய்யோ யாரோ வெடி குண்டு வச்சிட்டாளோ பயங்கர சத்தம் கேட்குது என்று கத்த, கண்ணாயிரம் பயந்து போனார்.
என்ன சொல்லுறீங்க..ரெயிலில் வெடிகுண்டு வைப்பாங்களா..என்று அச்சத்துடன் கேட்க, மற்றொருவர், அதை ஏன் கேக்கிறீங்க.. ரெயில் தண்டவாளத்திலே வச்சிடுதாங்க.. ஒரு பேட்டரி.. ஒரு ஒயரு.. குண்டுவச்சிட்டு போயிடுறாங்க.. ரெயில்வரும்போது ரிமோட் மூலமாக இயக்கி வெடிக்கவச்சிடுதாங்க என்று சொன்னார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், என்ன கொடுமை சார், பஸ்சிலே போனா கவுந்திடுதுன்னு ரெயிலில் வந்தா.. அதிலேயும் குண்டு வைப்பாங்கன்னு சொல்லுறீயளே.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு என்று கண்களை கசக்கினார்.
அப்போது ஒருவர், ஏங்க பயப்படாதீங்க.. குண்டு யாரும் வைக்கல, தண்டவாளத்திலே எருமைமாடு நிக்குதான்.. அதான் டிரைவர் பிரேக் போட்டு நிப்பாட்டி இருக்காராம்.. வேற ஒண்ணும் இல்லை என்றார்.
கண்ணாயிரம் உடனே,எருமை மாடு நின்னா என்ன.. ஹாரன் அடிச்சிட்டு விலகிப் போகவேண்டியதுதானே
பஸ்டிரைவர் எல்லாம் அப்படிதானே பண்ணுவாரு.. ரெயில் டிரைவர் புதுசா..விலகிப் போகாம.. இவ்வளவு நேரம் நிக்கிறாரு என்று சொல்ல, அருகில் இருந்தவர், யோவ் யாருய்யா நீ.. ரோட்டிலேதான் அப்படி பஸ்சை டிரைவர் வேறுபக்கமாக திருப்பி ஓட்டமுடியும்.. ரெயிலில் அப்படியில்ல.. தண்டவாளத்திலேதான் ரெயிலு ஓடணும்.. அதைத்தாண்டி ரெயிலை டிரைவர் திருப்புனா.
ரெயில் கவிழ்ந்திடும். அப்புறம் எல்லோரும் சிவலோகம்தான் போகணும் என்று சொன்னார்.
உடனே கண்ணாயிரம், நான் தாம்பரமில்லாப் போகணும் என்று சொல்ல, மற்றொருவர், அப்படியா அமைதியாக இரு..எருமை மாடு போயிட்டுன்னா.. ரெயில் போயிடும் என்று சொன்னார்.
கண்ணாயிரம், எருமைமாட்டை கம்பால் அடிச்சு விரட்டவே ண்டியதுதானே.. சும்மா பாத்துக்கிட்டு இருந்தா எப்படி போகும் என்று சொல்ல, மற்றோருவர், அடப்போங்க.. எருமை மாட்டுக்கு எங்கேப் போகணுமுன்னுத் தெரியல.. முழிச்சிக்கிட்டு நிக்குது.. அதுக்கு பின்னோக்கிப் போயி பழக்கமில்ல.. அதுக்காக நாம என்னசெய்யமுடியும்.. ரொம்ப நேரமா நிக்க முடியலன்னு தண்டவாளத்திலே படுத்துக்கிட்டாம். .என்ன பண்ணுறது..என்று கவலைப்பட்டார்.
கண்ணாயிரம் ,ஏதாவது கிச்சு கிச்சு காட்டினா எருமைமாடு ஓடிடாதா என்று கேட்க இன்னொருவர் , எருமைமாட்டுக்கு எந்த இடத்திலே கிச்சு கிச்சு மூட்டுறது என்று கேட்க, கண்ணாயிரம் உடனே அது காதுக்குள்ளே கிச்சு கிச்சு மூட்டவேண்டியதுதானே என்றார்.அதைக்கேட்ட ஒருவர் கண்ணாயிரத்தைப்பார்த்து, எருமைக்கு கிச்சு கிச்சுக் காட்ட நீங்க போறீயளா.. முட்டித்தூக்கிடும் என்க, கண்ணாயிரம்,அப்பாடி நான் போகமாட்டேன் என்று பின்வாங்கினார்.
இன்னொருவர்,ஏங்க எருமைமாடு எதையோ தின்னுட்டு அசைப் போட்டுட்டு இருக்கு.. அசைப் போட்டு முடிஞ்சாத்தான் அது போகும்.. என்க, கண்ணாயிரம் ,அப்படியா..என்றார்.
இன்னொருவர் எவ்வளவு சத்தம் போட்டும் அதுக்கு கேட்கலையே.. ஒருவேளை அதுக்கு காது கேட்காதோ என்று சொல்ல, கண்ணாயிரம் இருக்கும்.. இருக்கும் என்றார்.
சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டது. என்னாச்சு.. எருமை போயிட்டா என்று கண்ணாயிரம் கேட்க, மற்றொருவர், அதுவா யாரோ அட எருமைமாடே உனக்கு காது கேட்கலையா அப்படின்னு திட்டுனாராம்.. அதைக்கேட்டதும் எருமைமாட்டுக்கு ரோஷம் வந்து ம்ம ம்ம..என்று கத்தி ஏசிவிட்டு ஓடிட்டாம் என்றார்.
கண்ணாயிரம்,அப்படியா.. இதை அப்பவே செஞ்சிருக்கலாம்.. சும்மா சூ..சூ..என்று விரட்டினா எப்படிப் போகும்.
அது பெயரைச் சொன்னவுடன்தான் அதுக்கு கேட்டிருக்கு எதுக்கும் காமன்சென்ஸ் வேணும் என்றார்.
அப்படின்னா என்ன என்று ஒருவர் கேட்க, எல்லோரும் சொல்வாங்க நானும் சொல்லுறன் என்று கண்ணாயிரம் சொல்ல,எல்லோரூம் சிரித்தனர்.
-வே.தபசுக்குமார்.புதுவை.