கண்ணாரத்தை குழப்பிய யார் அந்த சார்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Who is that sir who confused Kannarath/ Comedy story/ Tapasukumar
24.2.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தபோது விழுப்புரம் அருகே எருமை குறுக்கே நின்றதால் ரெயில் நின்றது. எருமை சென்றபின் ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
அன்ரிசர்வ் பெட்டியில் இரண்டு பைகளுடன் பயணம் செய்த கண்ணாயிரம் தாம்பரம் எப்போது வரும் இறங்கலாம் என்ற நினைப்போடு இருந்தார். தாமிரபரணி தண்ணியிலிருந்து தாமிரத்தை பிரித்து வாங்கிக்கிட்டு ஊருக்கு வந்து முதலில் இந்த ஜவுளிக்கடைக்காரர் கடனை அடைச்சிப்புடணும்.. அப்பதான் நிம்மதி என்று நினைத்தார்.
ரெயில் வேகமாகச் சென்றது. இருள் சூழத் தொடங்கியது. என்னது இருட்டாகுது.. இருட்டுக்குள்ளே நான் தாம்பரத்தை எப்படி கண்டுபிடிப்பேன் என்று கண்ணாயிரம் முணங்கினார்.
அருகில் நின்றவரிடம்..அண்ண.. தாம்பரம் வந்ததும் சொல்லுங்க என்று கண்ணாயிரம் சொல்ல, அவரோ, யாருய்யா நீ..உன் வயசு என்ன..என் வயசு என்ன.. என்னைப் போய் அண்ணனுன்னு சொல்லுற.. உனக்கு தலைமுடி வெள்ளையாயிகிட்டு வருது. எனக்கு முடி கருகருன்னு இருக்கு.. என்னைப் போயி அண்ணன்னு சொல்லிட்டு இருக்க.. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று எகிற, கண்ணாயிரம் பயந்துபோய், தப்பா நினைக்காதீங்க.. வழக்கமா எல்லோரையும் கூப்படுறமாதிரி அண்ணன்னு கூப்பிட்டேன்.. என்னை விட்டுருங்க என்று கெஞ்சினார்.
அவரும், சரி புழைச்சிப்போ.. என் இளமை என்ன, என் அழகு என்ன.. என்னை வயசானவன் மாதிரி கூப்பிட்டா பெண்கள் மத்தியில் என் இமேஜ் என்ன ஆவது.. போ அந்தப் பக்கம் என்று திட்டினார்.
கண்ணாயிரம், என்னடா இது வம்பாப் போச்சு.. அண்ணன் கூப்பிட்டது தப்பா.. நான் என்ன.. டேய்ன்னா கூப்பிட்டேன்.. ரொம்ப மோசமடா என்று திரும்பி நின்று கொண்டார்.
ரெயில் மின்னல் வேகத்தில் சென்றது. வடை, காபி, டீ என்று ஒருவர் பயணிகளிடம் விற்பனை செய்து கொண்டு வந்தார்.
வடை சாப்பிடணும் போல் கண்ணாயிரத்துக்கு ஆசை வந்தது. வடை விற்பவர் வெகு தூரத்தில் நின்றார். அவரை எப்படி கூப்பிடுறது.. ஏய் என்று கூப்பிடலாமா.. கோபத்தில் வந்து கன்னத்தில் இரண்டு அப்பு அப்பிட்டான்னா.. அண்ணன்னு கூப்பிட்டாத்தான் பிரச்சினை.. தம்பின்னு கூப்பிடலாமா.. யாருக்கு யாருய்யா தம்பின்னு கேட்டு பளார், பளார் என்று அடிச்சிட்டான்னு என்னப் பண்ணுறது.. தெரியாத ஊருவேற என்று நினைத்துப் பயந்தார்.
ஆனால் வடை சாப்பிட வேண்டுமே.. கூப்பிடாவிட்டால் போய்விடுவானே என்னசெய்வது என்று கண்ணாயிரம் யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஆ.. பிரமாதம் என்று தன்னைத்தானே பாராட்டியபடி ..ச்சூ..ச்சூ..ச்சூ..என்று கூப்பிட்டார்.
வடை விற்பவரைத் தவிர அனைவரும் திரும்பிப்பார்த்தனர். உடனே கண்ணாயிரம் உங்களைக் கூப்பிடவில்லை அவரைக் கூப்பிட்டேன் என்று இரண்டு பைகளையும் கீழே இறக்கி வைத்துவிட்டு கை சைகையால் சொன்னார்.
ஓ அவரைக் கூப்பிட்டியளா என்று மற்றவர்கள் திரும்பிக்கொண்டனர்.
கண்ணாயிரம் மீண்டும் ச்சூ..ச்சூ என்று கைசெய்கை காட்டி வடைக்காரரை அழைக்க அவர் வியாபார மும்முரத்தில் இருந்ததால் கவனிக்க தவறிவிட்டார்.
வடைகாரரிடம் வடை வாங்கிய பெண் இதை கவனித்தார். கண்ணாயிரம் தன்னைத்தான் அழைப்பதாக நினைத்த அந்தப் பெண் தன் கணவரிடம் சொல்ல, இதை அறியாமல் கண்ணாயிரம் கையை ஆட்ட, அவர் கோபம் அடைந்தார்.
என்ன தைரியம் இருந்தால் என் மனைவியை ச்சூ ச்சூன்னு கூப்பிடுவ என்று ஆவேசமாக கண்ணாயிரத்தை நோக்கி எழுந்துவந்தார்.
கண்ணாயிரத்தைப் பார்த்து, உடம்புக்கு எப்படியிருக்கு என்று கேட்க, கண்ணாயிரம் அப்பாவியா,உடம்பு நல்லாத்தான் இருக்கு என்றார்.
உடனே அவர் கோபத்தில், அவா என் மனைவிடா.. அவா உடம்பு நல்லாயிருக்குன்னு சொல்லுறீய என்று அடிக்கப் பாய, கண்ணாயிரம், தப்பா நினைச்சிட்டீங்க.. உடம்பு நல்லா இருக்கான்னு கேட்டிங்க.. என் உடம்பைத்தான் கேட்கிறீங்கன்னு நினைச்சு, காய்ச்சல் கீச்சல் இல்லாம உடம்பு நல்லாத்தான் இருக்கு என்றேன் என்று சொன்னார்.
அதைக்கேட்ட அவர், அப்புறம் ஏன்ய்யா.. என் மனைவியைப் பார்த்து கையை ஏன் ஆட்டுன என்று சத்தம் போட, கண்ணாயிரம் , இப்பவும் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. அது உங்க மனைவியா.. அவங்க பக்கத்திலே நின்னு வடை வித்தாரே அவரைத்தான் கூப்பிட்டேன். அவர் கவனிக்கல.. உங்க மனைவி கவனிச்சியிருக்காங்க.. அதான் பிரச்சினை என்று சொல்ல, அவர் ,அப்படியா,என்றார்.
என்ன அப்படியா.. நான் வடைவாங்குறதுக்குள் இவ்வளவு அக்கப் போரா இருக்கு..வடை விக்கிறவரை எப்படி கூப்படுறது என்று கேட்டார்.
அது எனக்கு தெரியாது என்று அவர் சொல்லிவிட்டு தன் மனைவி இருந்த இடத்துக்கு சென்றுவிட்டார்.
என்னடா.. எப்படி வடை வாங்குறது.. எச்சில் வேற ஊறுது என்ன செய்யலாம் என்று நினைத்த கண்ணாயிரம், வடை,வடை என்று கத்த அந்த சத்தத்தைக் கவனிக்காமலே வடை விற்பவர் ரெயிலில் அடுத்தப் பெட்டிக்கு சென்றுவிட்டார்.
கண்ணாயிரம்,வடை போச்சே, என்று முணங்கியபடி நிற்க, பரிதாப்பட்ட ஒருவர் தான்வைத்திருந்த ஒரு வடையை எடுத்து நீட்டினார். அதைப்பார்த்த கண்ணாயிரத்துக்கு அவரது மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது. ரெயிலில் யார் எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிடாதீங்க என்று சொன்னது நினைவுக்குவர, அப்பாடி வடை கொடுத்து மயங்கவைத்து என் பையை ஆட்டப் போடபு பாக்கிறாரா.. நான்விட மாட்டேன்..என்று மனதுக்குள் நினைத்தவர் மெல்ல, எனக்கு வடை பிடிக்காது என்றார்.
வடை கொடுக்க வந்தவருக்கு தலை சுற்றுவது போலிருந்து. இவ்வளவு நேரம் வடை, வடை என்று கத்தினாரு. இப்போ,வடை பிடிக்காது என்கிறாரு. ஒருவேளை அவரா இருப்பாரோ என்று நினைத்தபடி அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரம்,தப்பிச்சோமடா என்று ஓரமாக ஒதுங்கி நின்றார். ரெயில் அதிக வேகமாகச் சென்றது. தாம்பரம் எப்போ வரும். இப்போதே நல்லா இருட்டிட்டே.. நான் யாருக்கிட்டே கேட்பேன் என்றவாறு கலங்கி நின்றார்.
சிறிது நேரத்தில் ரெயில் செங்கற்பட்டு வந்து நின்றது. அது தாம்பரமாக இருக்கும் என்று நினைத்த கண்ணாயிரம், அங்கே பேண்ட் சட்டை போட்டிருந்த ஒருவரை நோக்கி, சார் என்று கூப்பிட்டார். அந்த சத்தம் கேட்டதும் பேண்ட் சட்டை போட்டவர் திரும்பி, நானா என்று கேட்க, கண்ணாயிரம் புன்னையுடன், ஆமா,நீங்கதான் அந்த சார் என்று சொல்ல, பேண்ட்,சட்டை போட்டவர் ,என்னையா சாருன்னு சொன்னே என்று கண்ணாயிரம் கன்னத்தில் பளார், என்று அறைந்தார்.
கண்ணாயிரம் திடுக்கிட்டு கன்னத்தை தடவினார். அண்ணன்னு கூப்பிட்டா அடிக்கவர்ராங்க.. சார் என்று மரியாதையா கூப்பிட்டேன். அதுக்கும் அடிக்கிறாங்க.. யார் அந்த சார்.. ஏன் அடிக்கிறாரு? மோசமான ஊரா இருக்கும் போலிருக்கு என்று கண்களை கசக்கினார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.