June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தாம்பரத்தை தேடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayairam searched for Tambaram/ Comedy story/ Tapasukumar

27.2.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த போது இருள் சூழ்ந்தது. அதனால் தாம்பரம் எப்போது வரும் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுவந்தார். அண்ணா என்று ஒருவரை கேட்டு அவர் அடிக்கவந்ததால் எப்படி கேட்பது என்று திணறியபடி நின்றார். பேண்ட் சட்டை அணிந்த ஒருவரைப் பார்த்து, சார் என்று கூப்பிட அவர் கோபம் அடைந்து கண்ணாயிரம் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதில் கதிகலங்கிப் போன கண்ணாயிரம், மரியாதையா சார், என்றுதானே கூப்பிட்டேன் என்று சொல்ல, அவரோ, யோவ், விவரம் தெரியாத ஆளா இருக்கிய.. நீ என்னை சார் என்று கூப்பிட்டதும் “நீதானா அந்த சார்” என்று எல்லோரும் என்னை ஒருமாதிரி பாக்காங்க .. அது உனக்கு தெரியுமா.. என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம், சார் என்று கூப்பிட்டது தப்பா என்று கேட்க அவர் கோபமானார். எந்த ஊருய்யா உனக்கு.. உலகம் தெரியாதவனா இருக்கியே.. உனக்கு தமிழ் தெரியுமுல்ல, மரியாதையா அய்யா என்று கூப்பிடவேண்டியது தானே.. அதைவிட்டுட்டு அது என்ன சாரு.. மோருன்னுக்கிட்டு. வெள்ளக்காரன் போனபின்பும் ஆங்கிலத்தைப் பிடிச்சி தொங்கிறீயளே.. தமிழ் உணர்வே உங்களுக்கு கிடையாதா என்று அடுக்கிக்கொண்டே போனார்.
கண்ணாயிரத்துக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இவர் தமிழர் பண்பாட்டின்படி வேட்டி-சட்டை அணிந்திருந்தா அய்யா என்று கூப்பிட்டிருக்கலாம். இவர் பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு நம்மளை தப்பு சொல்லுறாரு என்று கண்ணாயிரம் முணங்கினார்.
அதைக்கேட்ட அவர், அங்க என்ன சத்தம் என்க, கண்ணாயிரம் ஒண்ணுமில்ல என்றார். என்னடா நான் யாருக்கிட்ட கேட்பேன். இதுக்குத்தான் ரெயிலில் கண்டக்டர் வேணுமுன்னுச் சொல்லுறது.. யாரு கேக்கா.. நம்ம சொல்லுறது இங்கே எடுபடமாட்டேங்குதே என்று புலம்பினார்.
அப்போது செங்கல்பட்டில் நின்ற ரெயில் மெல்ல புறப்பட்டது. கண்ணாயிரம், நாம தாம்பரத்திலே இறங்கணுமே.. அதைத் தாண்டிப் போயிட்டா என்னப் பண்ணுறது என்று நினைத்தார்.
அங்கு வேட்டி சட்டை அணிந்து நின்ற ஒருவரைப் பார்த்தார்.நல்லவர் போல் தெரிகிறார்.அவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்த கண்ணாயிரம். அவரை எப்படி கூப்பிடுவது என்று யோசித்தார். அய்யா.. சார்.. என்று எப்படி கூப்பிட்டாலும் பிரச்சினைதான் என்று நினைத்தவர் அவரது தோளை மெல்ல சுரண்டினார். இதைப் பார்த்து கடுப்பான அவர் ,என்னய்யா ஒரு மேனேசே இல்லாம தோளை சுரண்டுற.. கடன் கிடன் கேக்கியா.. என்னிடம் எதுவும் இல்லை என்றார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி, அது இல்லை, தாம்பரம் வந்தா சொல்லுங்க.. என்க,அவரோ, நானே செங்கல்பட்டு வந்தா இறங்கிடுவேன் நீ வேற ஆளுக்கிட்ட கேளு என்று அவர் சொல்ல, அருகில் நின்ற மற்றொருவர், செங்கல்பட்டா.. அதை ரெயில் தாண்டி பத்துநிமிடம் ஆச்சு என்க வேட்டி சட்டை போட்டவர், அய்யய்யோ.. செங்கல்பட்டு போயிட்டா என்று கத்தினார். இனி தாம்பரத்திலேதான் இறங்கணும் நானே என்ன செய்வேன் என்று கறினார்.
இதைப் பார்த்த ஒருவர், அடுத்து வருவது தாம்பரம்தான் இறங்கிடுங்க என்றார்.
கண்ணாயிரம் அவரிடம் தாம்பரம் வந்தா சொல்லுங்க என்க, அவர் எரிச்சலாகி, யோவ், அடுத்து ரெயில் எங்கே நிக்கோ அங்கே இறங்கிடுங்க என்றார்.
ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. தாம்பரத்துக்கு முன்னதாக சிக்னல் கிடைக்காமல் ரெயில் நின்றது. அடுத்து எங்கு நின்றாலும் தாம்பரம்தான் என்று சொன்னவரை கண்ணாயிரம் பார்த்தார்.
அவர் முறைத்ததால் கண்ணாயிரம் பயந்து போயி அவரிடம் கேட்காமல் இரண்டு பைகளையும் தூக்கிக்கொண்டு ரெயிலைவிட்டு இறங்கினார். நல்ல இருட்டு. எங்கே போவது என்று தெரியாமல் தவித்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.