June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் பிடித்துக்கொடுத்த குண்டு வாலிபர்/ நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

The young man who was caught by Kannayiram/comedy story/Tapasukumar

6.3.2/25
கண்ணாயிரம் புதுவையிலிருந்து தாம்பரத்துக்குச் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறிச் சென்றார். இருட்டானதால் தாம்பரம் ரெயில் நிலையம் எப்போது வரும் என்று அருகில் நின்ற ஒருவரிடம் கேட்டார்.
செங்கல்பட்டில் நின்று ரெயில் புறப்பட்டதால் அடுத்து எங்கே நிற்கிறதோ அங்கு இறங்கு என்று ஒருவர் சொல்ல, தாம்பரத்துக்கு முன்னதாக ஒரு சிக்னலில் ரெயில் நின்றபோது அதுதான் தாம்பரம் என்று கண்ணாயிரம் ரெயிலைவிட்டு இறங்கி நின்றார்.
இருளில் எங்கே செல்வது என்று புரியாமல் விழித்தபடி நின்றார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டு செல்ல, கண்ணாயிரம், என்ன யாரையும் காணோம்..யாருக்கிட்ட விவரம் கேட்கிறது என்று கண்களை கசக்கினார்.
ஒருகையில் ஒரு பை, மறுகையில் தாமிரபரணி தண்ணீர் பக்கெட்டு உள்ள மற்றோரு பையுடன் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் இருட்டில் ஒரு வாலிபர் தண்டவாளத்தில் நிற்பதைப் பார்த்தார். அவரும் வழிதெரியாமல்தான் நிக்கிறார் போலிருக்கு என்று நினைத்தார்.
மெல்ல நடந்து சென்றபோது அந்த வாலிபர் ஏதோ பேட்டரி, வயர், டெட்டனேட்டர் குச்சிகளை தண்டவாளத்தில் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தார். என்ன இது ஒரு மாதிரியல்லா இருக்கு.. ரெயிலை கவுக்கணுமுன்னா பேட்டரி, வயரை வைப்பாங்கன்னு ரெயிலில் ஒருத்தர் சொன்னாரே.. அப்படி எதுவும் வைக்கவா.. முயற்சி பண்ணுறாங்களா… அவன் வச்சிட்டு ஓடிடுவான்.. போலீஸ் நம்மளலல்லா பிடிச்சிட்டுப் போயிடுவாங்க.. நமக்கு ஏற்கனவே நேரம் சரியில்லை.. இதுலவேற இந்தச் சங்கடம் வேறய்யா.. என்ன செய்யுறது என்று குழம்பிக்கொண்டிருந்தார்.
அப்போது தூரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் வருவதைப் பார்த்த கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். ம்.. வசமாச் சிக்கிட்டன்.. அவங்க நம்மளைப் பிடிக்கிறதுக்குள்ள நம்மளே போயி அவங்கக்கிட்ட சொல்லிடுவோம் என்று இரண்டு பைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தார்.
கையில் இரண்டு பைகளுடன் வந்த கண்ணாயிரத்தைப் பார்த்த போலீசார் அவர் கள்ளச்சாராயம் கொண்டு செல்வதாக நினைத்து, ஏய், ஓடாதே.. நில்லு.. என்று கண்ணாயிரத்தை நோக்கி வேகமாகவந்தனர்.
கண்ணாயிரம்,என்னடா வம்பாப்போச்சு, தாமிரபரணி தண்ணிவச்சிருக்கோம். இவங்க கள்ளச்சாராயம் என்காங்க.. என்ன ஆகப்போகுதோ என்று நடுங்கியவாறு நின்றார்.
போலீஸ்காரர் பேட்டரி லைட்டை ஆன்பண்ண கண்ணாயிரம் முகத்தில் ஒளி பளிச்சென்று பட்டது. ஏய் நகராதே.. அங்கே நில்லு என்று போலீஸ்காரர்கள் எச்சரிக்கைவிடுத்த வண்ணம் கண்ணாயிரத்தை கையில் லத்தியுடன் நெருங்கினர்.
ஏய், பையில என்ன.. கள்ளச்சாராயம் தானே என்று கேட்க, கண்ணாயிரம், இல்லைய்யா .. இது தாமிரபரணி தண்ணி என்க, போலீஸ்காரர் டென்சன் ஆனார்.
என்ன கதைவிடுறீயா.. நட ஸ்டேசனுக்கு என்று ஒரு போலீஸ்காரர் மிரட்ட கண்ணாயிரம், அய்யா.. கொஞ்சம் பொறுங்க.. தண்டவாளத்திலே ஒருத்தன் ஏதோ பேட்டரி வயரை மாட்டிட்டுக்கிடக்கான்.. அது வெடிச்சி தொலைச்சிடப் போவுது. சீக்கிரம் கூட்டிட்டு போங்க.. ம்.. அவனையும் கூட்டிட்டுப் போயிடுவோம் என்றார்.
அதைக்கேட்ட போலீஸ்காரர், என்ன வெடி குண்டா.. என்னய்யாச் சொல்லுற.. உண்மையாவா என்று கேட்க, கண்ணாயிரம்.. மெல்ல போயி பாருங்க.. நான் போனா அடிச்சிப்பிடுவான் என்றார்.
உடனே போலீஸ்காரர்கள் உஷாரானார்கள். யோவ், ஓடிராதய்யா.. இங்கே நில்லு.. என்றவாறு பதுங்கி பதுங்கி வாலிபர் நின்ற இடத்துக்குச் சென்றனர்.
அந்த வாலிபர் பேட்டரி வயரை இணைக்கும் முயற்சியில் இருப்பதைப்பார்த்து திடுக்கிட்ட அவர்கள் அந்தவாலிபரின் பின்பக்கமாகச் சென்று ஒரே அமுக்காக அமுக்கினர்.
அவன் துள்ளி ஓட முயல, போலீசார் அவனை மடக்கிப் பிடித்தனர். அடப்பாவி.. ரெயிலை கவிழ்க்க வெடி குண்டா வைக்க என்று பதறிய ஒரு போலீஸ்காரர் செல்போனில் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அடுத்த வினாடி அந்த வழியாக வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. போலீஸ் மோப்ப நாயுடன் மெட்டல் டிடேடக்டர் கருவியுடன் போலீசார் அங்கு விரைந்து வர ஒரே பரபரப்பானது.

ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய வாலிபரை ரெயில்வே போலீசார் இழுத்துச்சென்றனர். அங்கே நடுங்கியபடி நின்ற கண்ணாயிரத்தைப் பார்த்து, நீ அவன் கூட்டாளியா.. போலீசை கண்டதும்.. தாமிரபரணி தண்ணின்னு ஏமாத்த பாக்கிறீயா… என்று இரண்டு போடுபோட்டு அவரையும் போலீஸ்நிலையத்துக்கு தள்ளிக்கொண்டு சென்றனர்.
கண்ணாயிரம்..நான் அவனில்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.என்னடா. இருட்டிலே உனக்கு இங்கே என்னவேலை.. நீ வெப்பன் சப்ளையரா என்று கேட்டு இழுத்துச்சென்றனர்.
கண்ணாயிரம் அவர்களிடம்,அய்யா அவன் யாருன்னே எனக்குத் தெரியாது.. தண்டவாளத்திலை ஏதோ பேட்டரியும் வயரையும் வச்சிக்கிட்டு இருந்தான்.. எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிப்பார்த்தார்.
போலீசார் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து லாடம் கட்டினால்தான் சரிவரும். அப்பதான் உண்மையைச் சொல்லுவா என்று தள்ளிக்கொண்டு சென்றனர்.
கண்ணாயாரத்துக்கு அழுகையே வருவது போலிருந்தது. குண்டுவச்சவனை காட்டிக்கொடுத்தா நம்மளை குண்டுகட்டாக தூக்கிட்டுப் போறாங்க.. இதுக்குத்தனர் நிறையபேரு ஊருல நடக்கிற அட்டூழியத்தை வெளியே சொல்லாமேலே இருக்காங்க.. என்று புலம்பினார்.
போலீஸ் நிலையம் வந்ததும் கண்ணாயிரத்தையும் அந்த வாலிபரையும் இன்ஸ்பெக்டர் இருந்த அறைக்கு கொண்டு சென்றனர்.
பளிச்சென்று ஒளிர்ந்த மின்விளக்கு ஒளியில் அந்த வாலிபரை கண்ணாயிரம் பார்த்தார். திடுக்கிட்டார். அவனைப் பார்த்து நீயா? என்று கண்ணாயிரம் அதிர்ச்சியுடன் கேட்க, அந்த வாலிபரும் கண்ணாயிரத்தைப் பார்த்து, நீயா? என்று பேரதிர்ச்சியுடன் கேட்க.. இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்து, என்ன நீயான்னு கேட்கிற.. இரண்டு பேரும் கூட்டாளிகள்தானா.. எவ்வளவு தைரியம் இருந்தா குண்டு வைப்பிங்க என்று லத்தியுடன் கோபமாக எழுந்தார்.
கண்ணாயிரம், இது என்னடா.. புதுப்பிரச்சினையா இருக்கு.. சார் இவன் புதுவையிலே எங்கிட்ட நூறு ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து ஏமாத்திட்டு பஸ் ஏறி ஓடிட்டான். இப்படித்தான் டிப்டாப்பா பேண்ட் சட்டை போட்டுட்டு வந்ததால நானும் ஏமாந்திட்டேன். ஊர் ஊரா அவனை தேடி அலைஞ்சேன்.. என்று சொல்ல, என்ன நூறுரூபாய்க்காக ஊர்ஊரா தேடினீயா.. என்ன கதைவிடுறீயா என்று இன்ஸ்பெக்டர் கோபத்தில் கேட்க, கண்ணாயிரம் கன்னத்தை தடவினார். அய்யா..இந்தப் பய பல இடங்களிலே கள்ள நோட்டை குடுத்து ஏமாத்தியிருக்கான்.. அதனால எங்கப் பாத்தாலூம் அவனை கண்டுபிடிச்சிக் கொடு என்று இன்ஸ்பெக்டர் சொல்லியிருந்தார் என்றார்.
உடனே எந்த இன்ஸ்பெக்டர் என்று அவர் கேட்க பாண்டிச்சேரி இன்ஸ்பெக்டருதான் என்று கண்ணாயிரம் சொல்ல, அவர் விழிக்க, கண்ணாயிரம், என்ன சந்தேகமா.. இன்னா பாருங்க.. கள்ளநோட்டுக்காரனை கண்டுபிடிக்கச் சொல்லி அவர் கொடுத்த போட்டோவைப் பாருங்க.. இந்த போட்டோவில் இருப்பனும் இவனும் ஓண்ணான்னு பாருங்க என்றார்.
அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர்.. ஆமா.. அவனேத்தான்.. போலீஸ் தேடிக்கிட்டு இருக்கிற பெரிய அக்கியூஸ்டை கண்டுபிடிச்சிருக்கீங்க.. நீங்க உட்காருங்க என்க, கண்ணாயிரம், அய்யா.. இவன்கிட்ட இருந்து நல்ல நூறு ரூபாய் வாங்கிகொடுங்க அய்யா என்றார்.
அதற்கு இன்ஸ்பெக்டர், அதைவிட பெரிய தொகை உங்களுக்கு கிடைக்கப் போகுது. எனக்கு புரமோஷன் கிடைக்கப் போகுது.. நீங்க சேரில் உட்காருங்க.. கான்ஸ்டபிள், சாருக்கு ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிட்டுவா என்க, கண்ணாயிரம்..,ம் கூல்டிரிங்ஸ் வேண்டாம்… சூடா ஒரு டீ போதும் என்றார்.
டிப்டாப்வாலிபரைப் பார்த்து, ஏண்டா என்ன ஏமாத்துன.. உங்கிட்ட நல்ல நூறு ரூபாய் வாங்காமவிடமாட்டேன் என்று எச்சரிக்க அவன் உதட்டைக்கடித்து கண்ணாயிரத்தை எச்சரித்தான்.
அய்யா அவன் என்னை மிரட்டுறான் என்று கண்ணாயிரம் சொன்னதும் போலீசார் அந்த வாலிபர் முதுகில் இரண்டு போடு போட்டனர்.
அப்படி போடுங்க அய்யா அப்பதான் சரிவருவான் என்று கண்ணாயிரம் சொல்ல,அவன் முறைத்தான்.

கண்ணாயிரத்துக்கு சூடாக டீ வந்தது.இன்ஸ்பெக்டர் அந்த டீயை வாங்கி கண்ணாயிரத்திடம் கொடுத்து சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரம் கண்ணாடி கிளாசைவாங்கி ப்பூ..ப்பூ என்று ஊதி ஊதி குடித்தார். அதை ரசித்துப்பார்த்த இன்ஸ்பெக்டர் மெல்ல கண்ணாயிரத்திடம், நீங்க ரகசிய போலீசா என்று கேட்க, கண்ணாயிரம் மெதுவாக, அய்யா இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று பாண்டிச்சேரி இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்காரு.. அதனால அது ரகசியமா இருக்கட்டும் என்றார்.
ஓ..அதுவும் சரிதான்.பாண்டிச்சேரி இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொல்லிடுவோம்..அவர் வந்திடுவார் என்று ரெயில்வே இன்ஸ்பெக்டர் சொல்ல, கண்ணாயிரமோ.. அய்யா, டிப்டாப் வாலிபரிடமிருந்து எப்படியாவது நல்ல நூறு ரூபாயை நான் எப்படியும் வாங்கிட்டு வந்துடுவேன் என்று என் மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிருங்க..என்றார்.
இன்ஸ்பெக்டர், என்னய்யா எவ்வளவு பெரிய அக்யூஸ்ட பிடிச்சிருக்காரு. அது தெரியாம இருக்காரே என்று நினைத்தார்.
அப்போது போலீஸ்படையுடன் டி.ஐ.ஜி.போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தார்.கண்ணாயிரத்திடம் சிக்கிய குண்டு வாலிபர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.