June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் திடுக்கிட்ட சுடிதார்சுதா படம்

1 min read

Kannayiram shocked by Suditaar Sudha photo

9/3/2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து தாம்பரத்துக்கு ரெயிலில் சென்றபோது முன்னதாக ரெயில் நின்றபோது இறங்கிவிட்டார். அவர் ஒரு கையில் ஒருபையும் மறுகையில் தாமிரபரணி தண்ணீர் பக்கெட் இருந்த பையையும் தூக்கிக்கொண்டு இருட்டில் எங்கே செல்வது என்று புரியாமல் தவித்தபோது தண்டவாளத்தில் ஒரு வாலிபர் வெடிகுண்டுவைப்பதை பார்த்து திடுக்கிட்டு போலீசிடம் காட்டிக்கொடுக்க போலீசார் அந்த வாலிபரை கொத்தாக தூக்கியதோடு கண்ணாயிரம் கள்ளச்சாராயம் வைத்திருப்பதாக நினைத்து அவரையும் சேர்த்து போலீஸ்நிலையத்துக்கு தள்ளிச்சென்றனர்.
அங்கே கண்ணாயிரம் கள்ளநோட்டு கும்பலை பிடிக்க பாண்டிச்சேரி போலீசாரால் நியமிக்கப்பட்ட போலீஸ் இன்பார்மர் என்று தெரிந்தது. இந்த நேரத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. போலீஸ் படையுடன் போலீஸ் நிலையத்துக்குள் நுழைய போலீஸ் நிலையம் பரபரப்பானது.
கண்ணாயிரம் காட்டிக் கொடுத்தது சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புடைய வாலிபர் சேகர் என்பதும் போலீஸ் தேடிவரும் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிந்தது.
உடனே டி.ஐ.ஜி. திடுக்கிட்டபடி அந்த வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டார். அதில் வாலிபர் சேகர் பத்து பெண்களை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்தது தெரிந்தது. அந்த படங்களைக்காட்டி வாலிபரிடம் டி.ஐ.ஜி. கேட்டபோது முதலில் மறுத்தான். பின்னர் ஒவ்வொரு பெண்ணின் படத்தையும் பார்த்து எப்படி ஏமாற்றினேன் என்று சொன்னான். அப்போது பாண்டிச்சேரி சுதா என்ற பெண்ணை உண்மையாக காதலித்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு கேன்சர் என்பதால் காதலை கைவிட்டதாகவும் கூறினான்.
பாண்டிச்சேரி சுதா என்றதும் கண்ணாயிரம் எழுந்து அந்த படத்தைக் காட்டுங்கள் என்று கேட்க, டி.ஐ.ஜி. அந்த படத்தை காட்ட, அதைப் பார்த்தகண்ணாயிரம் கண்கள் கசிந்தது. என்ன என்று டி.ஐ.ஜி கேட்க, கண்ணாயிரம் தழுதழுத்த குரலில், அது எங்க ஊரு பொண்ணு அய்யா பெயரு சுதா இல்ல.. அது சுடிதார் சுதா. அது நல்ல பொண்ணு அய்யா. அதுக்கு கேன்சர் என்று சொல்லி பொய் சொல்லுறான் சார்.. அந்த பொண்ணை ஏமாற்றி இருக்கான் அய்யா.. அவனை என் கையாலே இரண்டு குத்து குத்துறன் அய்யா என்று சொல்லி அந்த வாலிபர் வயிற்றில் கண்ணாயிரம் குதித்து குதித்து குத்தினார்.
அவன் ஆ.. என்று கத்த, ஏய் எங்க சுடிதார் சுதாவுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.. என்று கண்ணாயிரம் மறுபடியும் துள்ளிக்கொண்டு குத்தப் பாய, போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
உடனே டி.ஐ.ஜி. அந்த சுதா என்ற பெண்ணை பாண்டிச்சேரியிலிருந்து கூட்டிட்டு வாங்க என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதைப் பார்த்த கண்ணாயிரம் அய்யா, அப்படியே பூங்கொடியையும் கூட்டிட்டு வாங்க என்றார்.
பூங்கொடியையும் இவன் காதலிச்சி ஏமாத்தினானா? என்று டிஐஜி கேட்க.. இல்ல… இல்ல அது என் மனைவி பாண்டிச்சேரியிலிருந்து பூங்கொடியையும் கூப்பிட்டுட்டு வந்திடூங்க.. என்னை காணோமேன்னு தேடுவா என்றார்.
உங்க போனில் சொல்லி வரவழைக்கலாமே என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்ல, கண்ணாயிரமோ, அதை ஏன் கேக்கிறீங்க.. கடன்கார் தொல்லை தாங்காம போனை சுவிட்ச் ஆப் பண்ணி வீட்டிலே வச்சிட்டு வந்துட்டேன் அய்யா என்றார்.

அந்த நேரத்தில் பிடிபட்ட வாலிபர் சேகர் பதுக்கி வைத்திருந்த செல்போன் ஒலிக்க, அவன் அதை ஆப் பண்ண முடியாமல் திணறினான். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாய்ந்து அந்த செல்போனை அவனிடமிருந்து கைப்பற்றி டி.ஐ.ஜி.யிடம் கொடுத்தார்.
எதிர் முனையில் பேசியவன், என்ன சேகர்.. பல்லாவரம் மலையிலே நாம கடத்திவச்சிருக்கிற கோடீஸ்வரருடைய மகன் அதிகமாக அழுறான். பத்து கோடி கேட்டோமோ அந்த கோடீஸ்வரர் தர ஒத்துக்கிட்டாரா.. ஐந்து கோடின்னாலும் ஒத்துக்க.. பையனை வச்சிருக்கிறது ரொம்ப ரிஸ்க்.. என்ன நான் பேசுறேன்..நீ ஒண்ணும் பேச மாட்டேங்கிற.. ஹலோ..ஹலோ..லைன் கிடைக்கலையா.. மலையோரம் சிக்னலே கிடைக்கமாட்டேங்குது.. நான் வெளியேவந்து பேசுறன் என்று கட்பண்ணினான்.
அதைக்கேட்ட டி.ஐ.ஜி.அதிர்ச்சி அடைந்தார். என்ன இவன் எவ்வளவு பெரிய அக்கியூஸ்டா இருந்திருக்கான். இவனை தனி அறைக்கு கொண்டுபோய் உரிய முறையில் விசாரிங்க என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அந்த வாலிபர் செல்போன் காட்டிக்கொடுத்துவிட்டதே என்று நினைத்து கதற, போலீசார் அவனை இழுத்துச்சென்று பலமாக விசாரித்தார்கள்.
அதில் அவன் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மகனை கடத்தி பத்து கோடி கேட்டு மிரட்டிவருவது தெரிந்தது. உடனே ஒரு போலீஸ்படை பல்லாவரம் மலைப்பகுதியைச் சுற்றி வளைத்தது.
துப்பாக்கி முனையில் அங்கிருந்த மற்றொரு வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து கோடீஸ்வரர் மகனை மீட்டனர். போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
கோடீஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் காரில் மனைவியுடன் போலீஸ்நிலையத்துக்கு விரைந்து வந்தனர். தங்கள் மகனை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். போலீஸ் டி.ஐ.ஜிக்கு கைகூப்பி அவர்கள் வணங்க, டி.ஐ.ஜியோ எல்லாத்துக்கும் காரணம் இவர்தான் என்று கண்ணாயிரத்தை காட்டினார்.
கோடீஸ்வரரோ, கண்ணாயிரம்தான் தன்மகனை கடத்திய குற்றவாளி என்று தவறுதலாக நினைத்து அவரை அடிக்கப் பாய்ந்தார். கண்ணாயிரம் பயந்துபோய் அங்கும் இங்கும் ஓடினார். அதைப்பார்த்த டி.ஐ.ஜி.. ஏங்க அவரை அடிக்கப் பாக்குறீங்க என்று கோடீஸ்வரரிடம் கேட்க, அவரோ.. இவர்தானே என் மகனை கடத்திக்கொண்டு வச்சது என்று கோபமாகச் சொன்னார். டி.ஐ.ஜி உடனே, நீங்க தப்பா நினைச்சிட்டிங்க..உங்க மகனை கடத்திவச்ச குற்றவாளியை கண்டுபிடிச்சதே இவர்தான். இவர் போலீஸ் இன்பார்மர் கண்ணாயிரம் என்றார்.
அதைக்கேட்டதும் கோடீஸ்வரர் தன் தவறை உணர்ந்து கண்ணாயிரத்தை கட்டிப்பிடிக்க ஓடிவந்தார். அதைக் கண்டு அவர் பயந்து ஓட,போலீசார் மடக்கிப்பிடித்து கண்ணாயிரத்தை கோடீஸ்வரரிடம் ஒப்படைத்தனர். அவர் கண்ணாயிரத்தை கட்டிப்பிடித்து பசக் பசக் என்று முத்தமிட்டார்.
என் பையனை மீட்டுக்கொடுத்த நீ தெய்வ உருவில் வந்த மனிதனய்யா.. என்பையனை கடத்தியவன் பத்துகோடி கேட்டு மிரட்டினான். அதுக்காக பத்து கோடியை எடுத்து வச்சிருந்தேன். இப்போ அந்தப் பணத்தை உனக்கே தர்ரேன் அய்யா.. அப்பாவி மாதிரி இருக்கியே அய்யா.. நீ நீண்டநாள் வாழணுமய்யா என்று வாழ்த்தினார்.
கண்ணாயிரத்துக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த சேகர்பயல பிடிக்கப் போயி என்னவெல்லாம் வெளிவருது என்று நினைத்தார்.
அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்தனர். ரெயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டது சக்திவாய்ந்த வெடி குண்டு. அது வெடித்திருந்தால் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து பலர் பலியாகி இருப்பார்கள். நல்ல வேளையாக கண்ணாயிரம் காட்டிக் கொடுத்ததால் பல உயிர்கள் தப்பின என்றனர்.
அதைக்கேட்மதும் கண்ணாயிரத்தைப் பார்த்து சேரில் உட்காருங்கள் என்று டி.ஐ.ஜி. சொல்ல, கண்ணாயிரம் வெட்கத்துடன் வேண்டாம் என்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சேரில் உட்காரவைத்தனர். அவர் நெளிந்து கொண்டு உட்கார்ந்தார். பைகளை ஓரத்தில் வைத்தார். பையில் என்ன என்று டி.ஐ.ஜி கேட்க, கண்ணாயிரம்.. அதுவா.. தாமிரபரணி தண்ணீ அய்யா.. இதிலே தாமிரம் இருக்கு. தாம்பரத்தில் போய் இந்த தண்ணியிலிருந்து தாமிரத்தை பிரித்து எடுக்கலாம். அதிக ரூபாய் கிடைக்குமுன்னு சொன்னாங்க.. அதான் பக்கெட்டில் கொண்டு வந்தேன். இந்த ரூபா கிடைச்சா அந்த ஜவுளிக்கடைக்காரர் பாக்கி ஐம்பதாயிரத்தை எப்படியாவது கட்டியிருவேன். அதை கட்டிட்டா பெரிய நிம்மதி என்றார்.
தாமிரபரணி தண்ணியில் தாமிரம் என்று கண்ணாயிரம் சொன்ன கதையைக் கேட்டு அனைவரும் சிரிக்க கண்ணாயிரமூம் சேர்ந்து சிரித்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.