சமூக நீதியை நிலைநாட்டும் அரசு- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min read
MK Stalin is proud of a government that upholds social justice
29,3,2025
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:-
“தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றி வருகிறோம். சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழு அர்ப்பணிப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
சமத்துவம் காண்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் நடப்பாண்டில் 6 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2024-ல் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை ஆணையத்துக்கு வரப்பெற்ற 5,191 வழக்குகளில் 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களின் கல்வி அறிவை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்க அவர்கள் பகுதியிலேயே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது
பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சி.வி.கணேசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.