கண்ணாயிரம் தலைக்கு ஐம்பது லட்சம்/நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Fifty lakhs for a Kannayiram head/comedy story/Tapasukumar
4.4.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து தாம்பரத்துக்கு ரெயிலில் சென்று பாதிவழியில் இறங்கியபோது தண்டவாளத்தில் வெடிகுண்டுவைத்த டிப்டாப் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்புடையவன் என்றும் சுடிதார்சுதா உள்பட ஒன்பது பெண்களை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றியவன் என்று தெரியவந்தது.
டிப்டாப் வாலிபர் பிடிபட்ட செய்தி காலை பேப்பரில் வெளிவந்தது. மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டிப்டாப் வாலிபரை பிடித்துக்கொடுத்த புதுவை கண்ணாயிரத்துக்கு பத்து லட்சம் சன்மானம்
என்று போலீஸ் அறிவிப்பு என்ற தகவல் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் கண்ணாயிரத்தின் கலர்படம் பிரசுரமாகி இருந்தது.
போலீஸ்நிலையத்துக்கு வந்த அந்த பேப்பரை கண்ணாயிரத்திடம் போலீசார் காட்டினார்கள். அதைப் பார்த்த கண்ணாயிரம், ஆ..கலர் படம் போட்டிருக்காங்க, அன்னிக்கு ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்போது கூட நல்லா போடல. இது நல்லா இருக்கு, நல்லா இருக்கு என்று மகிழ்ச்சி அடைந்தார்.
சிறிது நேரத்தில் அவருக்கு பயம்வந்தது. அவர் போலீசாரிடம், அய்யா..நல்லா படம் போட்டுப்புட்டுப்புட்டிய.. அதில ஒரு சிக்கல் இருக்கு.. தீவிரவாதிகளோடு தொடர்புடைய டிப்டாப் வாலிபரை மட்டும் பிடிச்சிருக்கிய.. மற்றவங்க தலைமறைவா இருக்காங்க.. அவங்க என் தலையை கொண்டு போயிட்டா என்ன செய்வது என்று புலம்பினார்.
அதைக்கேட்ட போலீசார் சிரித்தனர். நீங்க பயப்படாதீங்க.. உங்களுக்கு ஒய்பிரிவு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றனர். அதற்கு கண்ணாயிரம்.. ஒய் பிரிவா அப்டின்னா.. என்று விழித்தார்.
அப்டின்னா உங்ககூட எப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் இருப்பாங்க.. என்றார் அந்த போலீஸ்அதிகாரி.
நான் போலீஸ்பாதுகாப்பே கேட்கலையே என்க, அதற்கு போலீசார், நீங்க கேட்கலைனா என்ன.. நாங்க ஒய்பிரிவு பாதுகாப்பு போடுவோம். ஏன்னா இனி உங்களுக்கு போனில் கொலைமிரட்டல் வரும் என்றனர்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், அதான் நான்தான் போனை சுவிட்ச்ஆப் பண்ணிவச்சிருக்கேனே.. பிறகு எப்படி போன்வரும் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், உனக்கு வராட்டா உன் மனைவிக்கு மிரட்டல் வரும்..உன் மாமனாருக்கு மிரட்டல் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே கண்ணாயிரம் மனைவி பூங்கொடி போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
என்ன கண்ணாயிரம் இருக்காரா.. அவர் போன் சுவிட்ச் ஆப் சுவிட்ச் ஆப் என்று வருது. அவருக்கு பரிசு ஐம்பது லட்சம் கொடுக்கணுமுன்னு நினைக்கிறோம்.. நீங்க யாரு என்று போனில் பேசியவன் கேட்க, அவர்.. நானு அவரோடு மனைவிங்க பரிசை எப்போ தருவீங்க என்று கேட்க அதற்கு அவன், அதை கண்ணாயிரத்துக்கிட்டேதான் சொல்வோம் .. சீக்கிரம் போனை கண்ணாயிரத்துக்கிட்ட கொடு என்றான்.
பூங்கொடி,சரிங்க..ஐம்பது லட்சம் தருவீகளா ..இதோ அவருக்கிட்ட பேசுங்க என்று போலீஸ் நிலையத்துக்குள் இருந்த கண்ணாயிரத்திடம் போனை கொடுத்தார்.
கண்ணாயிரம் அவரிடம், யாரு..யாரு. .என்று கேட்க ,பூங்கொடி அதுவா உங்களுக்கு ஐம்பது லட்சம் பரிசு கொடுக்கணுமாம்..பேசுங்க.. பேசுங்க.. பரிசை வாங்குங்க.. கடன் எல்லாம் அடைச்சிடலாம் என்றார்.
கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன், ஹலோ யார் பேசுறது என்று கேட்க, எதிர்முனையில் பேசியவன்,யாரு கண்ணாயிரமா..என்று கேட்க, கண்ணாயிரம்.. ஆமா..ஆமா என்றார்.
உடனே அவன், உங்கள் துப்பறியும் திறனுக்கு பாராட்டுகள். காலை நம்பர் ஒன் பத்திரிகையில் செய்தி பார்த்தேன். உங்க படம் அழகாக இருந்தது என்று சொல்ல, கண்ணாயிரம் மகிழ்ச்சியில், மிக்க நன்றி, மிக்க நன்றி,என்றார்.
உடனே அவன், தீவிரவாதியோடு தொடர்புடைய வாலிபரை பிடிச்சிக்கொடுத்திருக்கீங்க. .வாழ்த்துகள். உங்கள் திறமைக்கு பரிசு கொடுக்கணுமுன்னு நினைக்கிறோம்.. ஐம்பது லட்சம் என்று சொல்ல, கண்ணாயிரம்,ரொம்ப நன்றி .. அதை எங்கே எப்போ என்னிடம் கொடுப்பீங்க என்று அவசரமாக கேட்க, அதற்கு அவன், அந்த பணத்தை நாங்க உங்க மனைவியிடம்தான் கொடுப்போம் என்று சொன்னான். அதற்கு கண்ணாயிரம், ஏன்..அதை எங்கிட்ட தரமாட்டியளா என்று கேட்க, உடனே அவன், உங்களிடம் கொடுக்க முடியாதே என்று சொல்ல, கண்ணாயிரம் ஏன்..என்று வேகமாக கேட்டார்.
உன் தலைக்குத்தாய்ய ஐம்பது லட்சம் என்றார். அதற்கு கண்ணாயிரம் நானே வந்து என் தலைய காட்டுறேன் பணத்தை தருவீங்களா? என்றார்.
அதற்கு அவன்.. யோவ்.. நீ உயிருடன் இருக்கமாட்டியே.. என்று சொல்லி சிரித்தான்.
கண்ணாயிரம் பயந்து போயி, என்ன சொல்லுற என்று கேட்க, அவன்..யோவ் உன் தலையை எடுத்திருவோம் என்று சாதாரணமாக சொன்னான்.
கண்ணாயிரத்துக்கு வயிற்றைக்கலக்கியது. யோவ்..உன்னுடைய ரூபாயும் வேண்டாம்.. ஒண்ணும் வேண்டாம்..போனை வை.. தலை வேணுமாம்ல தலை.. இறைச்சிக்கடையிலே போய் கேட்கவேண்டியதுதானே.. நானே ஒரு தலைதான் வச்சிருக்கேன்.. இதை கொடுத்திட்டு நான் என்ன பண்ணுறது.
ராஸ்கல் இடியட், நான்சென்ஸ் என்று திட்டினார்.
உடனே அவன், ஏங்க தலைக்கு நல்லா சேம்பு போட்டு எண்ணை தடவி சுத்தமா வச்சிக்கோங்க.. எடுத்துட்டுப் போகும்போது எங்களுக்கு நாற்றம் அடிக்கக்கூடாது பாத்தியளா என்று அவன் சிரிக்க.. கண்ணாயிரம் தன் கழுத்தை தடவிப் பாத்துக்கொண்டார்.
அட..அடே.. ஐம்பது லட்சம் என் மனைவிக்கிட்ட கொடுப்பானாம்.. நான் என் தலையை கொடுக்கணுமாம். இந்த பிரச்சினையிலே நான் தலையிட்டதால என் தலையே எடுப்பேங்கிறான்.. ஏய்..ஏய்.. இனி இந்த பிரச்சினையிலே நான் தலையிடல. .என் தலையை விட்டுரு.. இது சின்ன தலை என்று கெஞ்சினார்.
அதற்கு அவன், நீங்க பெரிய தலை.. பேப்பரிலே வந்துட்டே.. அடையாளம் நல்லா தெரிஞ்சிட்டு.. சின்ன தலைன்னு ஏமாத்தாதீங்க.. படத்திலே உங்க தலை பெரிசா தெரியுதே.. நல்லா எண்ணை போட்டு வையுங்க.. அப்போதான் எங்களுக்கு வெட்டுறதும் ஈசி.. உங்களுக்கும் அதிகம் வலிக்காது. உங்க நன்மைக்காத்தான் சொல்லுறன்.. தலைய கொடுத்துருங்க..உங்க மனைவிக்கிட்டே ஐம்பது லட்சம் கொடுத்திருவோம். அவங்களைப் பத்திக் கவலைப்படாதீங்க.. எப்பவுமே எங்களை யார் காட்டி கொடுக்கிறார்களோ அவர்கள் தலையை எடுத்திடுவோம். அவங்க குடும்பத்துக்கு ஐம்பது லட்சம் கொடுத்திடுவோம்.. இதுதான் எங்கள் பாலிசி என்றான்.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. என்ன பாலிசி.. உங்க பாலிசி.. இது நல்லா இல்லா.. என்றார்.
அதற்கு அவன், என்ன எங்க பாலிசி நல்லா இல்லங்கிற.. இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கிற.. பணம் கெட்டுற.. நீ செத்தான பணம் கொடுப்பாங்க. அதுபோலத்தான் எங்க பாலிசியும்.. நீ செத்தாதான் நாங்க பணம் கொடுப்போம் என்க கண்ணாயிரத்து ஆத்திரம் வந்தது.டேய்..இன்சூரன்ஸ் பாலிசியை குறை சொல்லாத..நானும் பாலிசி போட்டிருக்கேன்.. பத்து வருஷம் கழிச்சி நான் உயிரோட அந்த பணத்தை நான் வாங்கிடலாமுன்னு சொல்லியிருக்காங்க.. நீ என்னடான்னா நான் தலையை கொடுத்தாதான் ஐம்பது லட்சம் என்கிற.. உன் பாலிசி எனக்கு பிடிக்கல போ..என்க, அவன் சிரித்தான்.கண்ணாயிரம்.. டேய்.. மிரட்டாதேடா.. நான் கனவிலே யாராவது தலையை எடுக்கிறமாதிரி கனவு கண்டாலே நாலு நாள் தூங்க மாட்டேன்.. நீ உண்மையிலே தலையை எடுப்பேன்ங்கிறீயே.. போடா..போனை வையுடா என்க,அவன்,ஏய்..நான் சொன்னதை போலீசில சொன்னா..உன் தலையை மட்டுமல்ல உன் கண்ணையும் எடுத்திடுவேன்.. ஜாக்கிரதை என்க, கண்ணாயிரம் போனை கட் செய்தார்.அவரது உடல் வியர்த்தது. இதை அறியாமல் பூங்கொடி,ஏங்க ஐம்பது லட்சம் எப்போ யாருக்கிட்ட தருவாங்க என்று கேட்க, கண்ணாயிரம் மெல்ல பூங்கொடியிடம், அதுவா உங்கிட்டதான் தருவாங்களாம் என்றார்.உடனே பூங்கொடி.. ஏன் உங்கக்கிட்ட தரமாட்டாங்க என்று கேட்க,கண்ணாயிரம், அதுவா என் தலையை எடுத்தப்பிறகு என்கையாலே பணத்தை வாங்க முடியாதுல்லா.. அதான் உங்கிட்ட கொடுப்பாங்களாம்.. என்க, அப்படின்னா அந்த பணமே வேண்டாமுன்னு சொல்லிடுங்க என்று பூங்கொடி சொல்ல,கண்ணாயிரம்… மெதுவாக, நான் சொன்னேன்.. அவன் கேட்க மாட்டேங்கிறான். கழுத்துக்கு நல்லா எண்ணை போட்டுவைக்கச் சொல்லுறான் என்றார்.
ஏன் என்று பூங்கொடிகேட்க,அப்பதான் கழுத்தை வெட்டும் போது வலிக்காதாம்.. என்று ஓ என்று அழுதார்.
அப்போது போலீஸ்காரர்கள் வந்து ஏன் அழுறீங்க.உங்க நண்பர் போனில் என்ன சொன்னார் என்று கேட்க,கண்ணாயிரம் விழித்தார்.போலீஸ்காரங்ககிட்ட சொன்னா கண்ணை பிடுங்கிறுவமுன்னு மிரட்டினானே..ஆ..போலீசுக்கிட்டே சொல்லக்கூடாது..என்று நினைத்த கண்ணாயிரம் ஒண்ணுமில்ல என்றார்.ஆனால் பயத்தில் கழுத்தை தடவி விட்டுக்கொண்டு போலீசாரிடம், அய்யா.
நாங்க இனி பாண்டிச்சேரிக்குப் போறோம்..பணமூம் வேண்டாம்..ஒண்ணும் வேண்டாம் என்றார், பயந்தபடி.
-வே.தபசுக்குமார்.புதுவை.