கேன்சருக்கு புதுசொல் கேட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayairam who heard a new word for cancer/ Comedy story/ Tapasukumar
19.4.2025
கண்ணாயிரம் செல்போனில் தனது மாமனார் அருவாஅமாவாசை மிரட்டியதால் மிரண்டுபோய் போலீஸ்நிலையத்தில் அங்கும் இங்கும் ஓடினார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, என்னாச்சு.. ஏன் இந்த பயம் என்று கேட்க, கண்ணாயிரம் நடுக்கத்துடன், என் மாமனார் அருவாளுடன் வருவதாக சொன்னார். அதான் பயந்து போனேன் என்க, போலீசார் அவரிடம் நாங்க இருக்கோம் பயப்படாதீங்க என்றனர்.
அதற்கு கண்ணாயிரம், எதுக்கும் நீங்க துப்பாக்கியோடு இருங்க என்க,போலீசார் சரி..சரி என்றனர்.
அந்த நேரத்தில் டிப்டாப் வாலிபர் சேகரிடம் ஏமாந்த எட்டு பெண்கள் அங்கு விரைந்து வந்தனர். டி.ஐ.ஜி ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். அப்போது, அந்த பெண்கள் டிப்-டாப் வாலிபர் திருமணம் செய்வதாக ஏமாற்றி பல லட்சம் பறித்துவிட்டதாக புகார் கூறினர். அதைக்கேட்ட டி.ஐ.ஜி… அவர்களிடம், ஏங்க. ஒவ்வொருவரும் டிப்டாப் வாலிபர் பணத்தை பறித்துவிட்டார் என்று புகார் சொல்லியிருக்கீங்க.. ஆனா சுடிதார் சுதா மட்டும் அந்த டிப்டாப் வாலிபர் தன் இதயத்தை பறித்துவிட்டார் என்று புகார் சொல்லியிருக்கார். டிப்டாப் வாலிபரை பல்வேறு வழக்கில் நாங்க கைது செய்திருக்கிறோம். கோர்ட்டில் அவரை ஆஜர் பண்ணுவோம். நீதிபதி என்ன தண்டனை கொடுக்கப் போறாருன்னு தெரியல என்று சொன்னபோது டிப்டாப் வாலிபரை கைவிலங்கு போட்டு போலீசார் இழுத்து வந்தனர்.
அப்போது அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள், படுபாவி.. எங்களிடம் பணம்வாங்கி ஏமாத்திட்டியே, நீ நல்லா இருப்பியா, என்று கத்தினர். அவர்களை கண்டுகொள்ளாமல் டிப்டாப் வாலிபர் நடந்து வந்தார்.
சுடிதார் சுதா அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் டிப்டாப் வாலிபர் நின்றார். பெண்மையே நீ வாழ்க,கேன்சர் சரியாகிடும் என்று அவன்கையைத் தூக்கி சொல்ல, சுடிதார்சுதா குலுங்கி குலுங்கி அழுதார்.
அதைப் பார்த்த கண்ணாயிரம் கோபத்தில் டிப்டாப் வாலிபரை பார்த்து, டேய்.. ஏண்டா புதிய பறவை படத்தில நடிகர் திலகம் பேசுற வசனத்தை பேசுற.. சும்மா இருக்கிற பொண்ணுக்கிட்ட, கேன்சர், கேன்சர் என்கிற.. அதைக் கேட்டு அது அழுகிறதைப் பாரு.. இன்னொரு தரம் அப்படி சொன்னே..வெளுத்துருவேன்..வெளுத்து என்று கண்ணாயிரம் கத்தினார்.
சுடிதார்சுதாவிடம் பயில்வான், அழாதேம்மா..அவன் கேன்சர் அப்படின்னு ஏன் சொல்லுறான்.. என்று கேட்க, சுடிதார் சுதா தடுமாறினார். பின்னர்.. அது கேன்சருன்னா கேன்சர் அல்ல. கடக ராசி.. அவர் ராசிக்கும் என் ராசிக்கும் பொருந்தாது. நான் நேர்மையான வழியில் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்பேன். அவர் குறுக்கு வழியில் எப்படியாவது தவறான வழியில் பணம் சம்பாதிக்கணுமுன்னு நினைப்பார். அதாம் இரண்டு பேருக்கும் ஒத்துவரல என்று சுடிதார் சுதா சொல்ல, பயில்வானும் இறைச்சிக்கடைக்காரரும் அப்படியா. .கேன்சரு என்று சொன்னவுடன் நாங்க பயந்திட்டோம் என்றனர்.
கண்ணாயிரம், ஆமா நானும் முதலில் அப்படிதான் பயந்திட்டேன்..கே ன்சர் என்றால் அது ஒரு ராசியாமே.. இங்கிலீசுல இருப்பத்தாறு எழுத்துதானே இருக்கு. கொஞ்சமா எழுத்து இருந்தா என்ன பண்ணுவாங்க.. புற்று நோயுக்கும் கேன்சர் என்று சொல்லுறானுவ.. கடக ராசிக்கும் கேன்சர் என்று சொல்லுறானுவ.. ஒரே கன்பூயுசா இருக்கு.. கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கியளோ இல்லையோ.. அதுக்கு இங்கீலிசுல வேற பெயர் கண்டுபிடிங்க. அதுக்கு யாருக்கிட்ட சொல்லணணும் என்று கேட்க பயில்வான் அதற்கு, கண்ணாயிரம் இங்கிலீசில புதுவார்த்தை வரணுமுன்னா லண்டனில்தான் சொல்லணும் என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், என்ன லண்டனா.. என்னை தீவிரவாதி லண்டனில் இருந்து செல்போனில் பேசி மிரட்டினான். முன்கூட்டி தெரிஞ்சிருந்தா அவன்கிட்ட சொல்லி கேன்சருக்கு இங்கிலீசில் வேறு பெயர் கண்டுபிடிச்சிவைக்கச் சொல்லியிருக்கலாம் திருப்பி அவனிடம் பேசினா.. கழுத்துக்கு எண்ணை போட்டுவச்சிருக்கியான்னு கேட்பான்.. அது வேண்டாம்ப்பா என்றார்.
பயில்வான் அவரிடம், என்ன கண்ணாயிரம் தீவிரவாதி லண்டனில் இருந்து பேசி மிரட்டினான் என்று சொன்னாயே.. அவன் இங்கீலிசுலதானே மிரட்டியிருப்பான்.. அது உனக்கு எப்படி புரிஞ்சது என்று பயில்வான் கேட்க, கண்ணாயிரம் உடனே.. என்ன தீவிரவாதிய சாதாரணமா நினைச்சியளா.. அவனுக்கு ஏழு மொழி தெரியும்.. அப்படின்னு போலீஸ்காரங்க சொன்னாங்க.. தீவிரவாதி என்னிடம் தமிழில்தான் பேசினான்.. அவன் லண்டனில் தமிழ் பேப்பரில் என் படத்தையும் செய்தியையும் பாத்திட்டுதான் பேசுறேன்னு சொன்னான் என்றார்.
உடனே பயில்வான், சரி கண்ணாயிரம்.. லண்டனில் தமிழ் பத்திரிகை கிடையாதே.. அப்புறம் எப்படி தமிழ் பேப்பருல உன் படத்தை பாத்திருப்பான்.. சும்மா கதைவிடாதே என்க, கண்ணாயிரம், ஆமா..லண்டனில் தமிழ்பேப்பர் வருமா.. என்று கேள்வி எழுப்பினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.