June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பழனிவேல் தியாகராஜனுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை- “எதிரிகளுக்கு உங்கள் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது”

1 min read

M.K. Stalin’s advice to Palanivel Thiagarajan

22/4/2025
நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான திராவிட அறநெறியாளர் – தமிழவேள் பி.டி.ராஜன் குறித்த “வாழ்வே வரலாறு” என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகஇருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்!

1936-இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் First Minister-ஆக இருந்த பி.டி. ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு நான் வெளியிடுகிறேன்!

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, “என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்” என்று பி.டி.ராஜன் சொன்னார். முப்பது ஆண்டுகள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியை பெற்றபோது, ‘பழிக்கு பழி வாங்கப்பட்டது’ என்று சொன்னார்.

தி.மு.க.வின் எழுச்சியை- வெற்றியை- நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி, ‘நீதிக்கட்சி மறுபடியும் வென்றது’ என்று அவர் சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், தி.மு.க.வின் சாதனைகளும், செயல்பாடுகளும்தான், “1971 தேர்தலில், தி.மு.க.வுக்குத்தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்; பெரும்பான்மை பலத்தோடு கழக ஆட்சிதான் அமையவேண்டும்” என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது!

அந்தளவுக்கு, அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவர்தான் பி.டி.ராஜன். எந்தளவுக்கு பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், பி.டி.ராஜனை போற்றினார்கள் என்றால், 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, கழக அமைச்சர்களுக்கு எல்லாம் நீதிக்கட்சியின் சார்பில் ராயப்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் உணவகத்தில் பி.டி.ராஜன் ஒரு விருந்து வைத்தார்.

அப்போது உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, “தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நிறைவேற்றுவேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, ”தமிழவேள் பி.டி.ராஜன் போன்ற பெருந்தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், எனது ஆட்சி நடைபெறும்’ என்று உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்: UPSC தேர்வு முடிவுகள்: நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் சாதனை- முதல்வர் பெருமிதம்
“பி.டி.ராஜனின் அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது” என்று கலைஞர் சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறோம்!

1966-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், ”இன்றைய தி.மு.க.வினர் நம்முடைய வாரிசுகள்தான்’ என்று பி.டி.ராஜனே குறிப்பிட்டார். எனவே, நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்!

பி.டி.ராஜனுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான்! திராவிட வாரிசுகள்! இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள்! வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்றுதான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் காலத்திலும், “நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்” என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார்; இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.

நம்முடைய பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த- வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது.

இதை ஏன் அதை சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக்கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள். அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கழகத் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்!

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.