பொய் செய்தி பரப்பிய சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்
1 min read
India condemns Chinese state media for spreading fake news
8.5.2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.
பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
அந்தவகையில் பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களும், முசாபராபாத், கோட்லி, பிம்பர், குல்பூர், பர்னாலா போன்ற இடங்களில் உள்ள கட்டமைப்புகள் இந்தியாவின் தாக்குதலுக்கு இரையாகின.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடும் மற்றும் பயிற்சியளிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் தலைமையகங்கள், பயிற்சி முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த துல்லியமான அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஏராளமான பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த அதிரடி வேட்டையில் சுமார் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தன. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து பொய் செய்தி பரப்பிய சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக, சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ்-ல் இந்த செய்தி வெளியானதாக தெரிகிறது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி தவறான தகவல்களை வெளியிடும் முன்பு உண்மையை சரிபார்க்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பலர், ஆபரேசன் சிந்தூர் குறித்து வதந்தி பரப்புவதாகவும், பொறுப்பான ஊடகமாக குளோபல் டைம்ஸ் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.