துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதியை நிறுத்த வணிகர்கள் முடிவு
1 min read
Traders decide to stop marble imports to Turkey
14.5.2025
பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய ராணுவம் 4 நாட்கள் நடத்திய மோதல் கடந்த 11-ந்தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே இந்தியாவுடன் மோதல் நடந்து கொண்டு இருந்தபோது துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. துருக்கி அதிபர் எர்டோகன் நேரடியாக பாகிஸ்தான் பிரதமரை ஷெபாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்டு பேசி ஆதரவை வழங்கினார். இந்தியா மீது பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் துருக்கி வழங்கியிருந்ததை ராணுவத்தினர் உறுதி செய்தனர். இது குறித்த தகவல் வெளியானதும் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் துருக்கி நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை மும்பை வியாபாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஆப்பிள் இறக்குமதியை இந்திய வணிகர்கள் நிறுத்திய நிலையில், இன்று மார்பிள் இறக்குமதியையும் நிறுத்த முடிவு செய்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கிக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு அடிமேல் அடி விழுவதாக உள்ளது.
இது தொடர்பாக வணிகர்கள் கூறுகையில், துருக்கி மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் உதய்பூர் ஒன்றாகும். துருக்கியிலிருந்து மார்பிள் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். மார்பிள் இறக்குமதியை நிறுத்தக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிள் இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. இதனால் துருக்கிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறினர்.