தென்காசியில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை-4 பேர் கைது
1 min read
Laborer beaten to death in Tenkasi – 4 arrested
20.5.2025
தென்காசியில் கூலித் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டு சிறுவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 46) என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார் இவர் கடந்த 15ஆம் தேதி இரவில் தென்காசி ரயில்வே நிலையம் அருகே உள்ள உடையார் ரயில்வே கேட் பகுதியில் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது தென்காசி பகுதியைச் சேர்ந்த 15 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் 8 பேரும் நண்பர்களாக இருந்த நிலையில் நண்பர் ஒருவருக்கு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அஅப்போது முருகன் இவர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடியதாகவும் இவர்கள் தடுத்து நிறுத்தியதையும் மீறி ஓடிச் சென்றதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து முருகனை பின்தொடர்ந்து ஓடி அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மயக்கம் அடைந்த முருகனை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் ரயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முருகன் சேர்க்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்நிலையில் தற்பொழுது முருகனை தாக்கிய 8 சிறார்கள் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில் ஐந்து சிறுவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நெல்லை சிறார் சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.சிறுவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.