தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி
1 min read
School Education Department approves appointment of temporary teachers
31.5.2025
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் நியமனம் செய்து கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதனை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் மேற்கொள்ளவும், அவ்வாறு நியமனம் செய்யும் போது பின்பற்றவேண்டிய நிபந்தனைகள் குறித்தும் கல்வித் துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மகப்பேறு விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், மாற்றுப் பணியில் சென்றுள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கு பாடம் சார்ந்த தகுதிவாய்ந்த முதுகலை பட்டம் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம். பள்ளி மேலாண்மைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித புகாருக்கு இடமளிக்காத வண்ணம் பணிநியமனத்தை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.