திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் விஷ மீன்கள்; 5 பேர் காயம்
1 min read
Poisonous fish swim off Tiruchendur beach; 5 injured
31.5.2025
திருச்செந்தூரில் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள், கடற்கரையில் புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன.
இந்த ஜெல்லி மீன்கள் விஷத்தன்மை கொண்டவை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதனால் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். கடலில் நீராடி கொண்டிருந்த பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களின் கை, கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள், பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க கோரி, கோவில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் முள்ளெலிகள் கரை ஒதுங்கின. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவற்றை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி, அதனால் பக்தர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.