June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர்

1 min read

Case of teeth extraction by interrogators: IPS officer Balveer Singh Nellai appears in court

6.6.2025
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர்சிங் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது சஸ்பெண்டு உத்தரவை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கொடுங்குற்றம் புரிதல், கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல், ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 14 போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நெல்லை 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மற்றும் போலீசார் இன்று ஆஜரானார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் மாடசாமி கூறுகையில், இந்த விவகாரம் முழுவதும் மனித உரிமை மீறல். இதனை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நீதிபதி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். சிறையில் கைதிகளுக்கு மிக பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை. இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *