இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
1 min read
Former ISRO scientist Nellai Su.Muthu passes away
16/6/2025
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார்.
மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய முத்து , அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.