நெல்லை: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை
1 min read
Nellai: One year jail for POCSO case convict
17/6/2025
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த அல்கீஸ் அமல்ராஜ் (வயது 50) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி, துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வீரவநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அல்கீஸ் அமல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் நேற்று (16.6.2025) அல்கீஸ் அமல்ராஜிற்கு ஒரு (1) ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. சத்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் வீரவநல்லூர் காவல் துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.