சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
1 min read
Forest fire in the Western Ghats near Sankarankovil
21.6.2025
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், மிளா, உடும்பு, மரநாய், பன்றி, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் நோய் தீர்க்கும் அரிய வகை மூலிகைகளும், பழமை வாய்ந்த மரங்களும் அதிக அளவில் இருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கோட்டைமலை பகுதியில் நேற்று மாலையில் இருந்து காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவை காட்டை விட்டு வெளியேறி வருவதாக மலையை ஒட்டிய பகுதிகளில் வாழும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வேகமாக பற்றி எரியும் காட்டுத் தீயால், மலையில் உள்ள அரிய வகை மூலைகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகி வருகின்றன. இதற்கிடையில், வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்கும் பணி சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காட்டுத் தீ காரணமாக மலையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு சாம்பல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.