போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது
1 min read
Actor Srikanth arrested for drug use
23.6.2025
மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் தனியார் மதுபான விடுதி ஒன்றில் அடிதடியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அ.தி.மு.க., பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அ.தி.மு.க., ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் யாரிடம் போதைப்பொருள் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு பிரசாத் போதைப்பொருள் வழங்கியதாக வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையே கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கினர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.