Did an 8-month-old baby girl die from rubbing camphor and balm together?
17.7.2025 சென்னை அபிராமபுரம், வல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் (35 வயது). இவரது 8 மாத பெண் குழந்தை சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக குழந்தையின் பெற்றோர், கற்பூரம் மற்றும் தலைவலி தைலத்தை சேர்த்து குழந்தையின் மூக்கில் தேய்த்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. கற்பூரம் மற்றும் தலைவலி தைலத்தை சேர்த்து தேய்த்ததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தை சளி பிரச்சினையால் உயிரிழந்ததா? அல்லது கற்பூரம் மற்றும் தலைவலி தைலத்தை சேர்த்து தேய்த்ததால் மூச்சுத்திணறி இறந்ததா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, குழந்தை பிறக்கும் போதே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.