எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது- ஒத்திவைப்பு
1 min read
Parliament paralyzed due to heavy uproar by opposition MPs – adjournment
28.7.2025
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ல் துவங்கியது. ஆப்பரேஷன் சிந்துார், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம், பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருதால், பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 28) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
ராஜ்யசபா காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதும், புதியதாக தேர்வான அதிமுகவை சேர்ந்த தனபால், இன்பதுரை ஆகியோர் எம்.பி.,யாக பதவியேற்றனர். அவர்களுக்கு அவை தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று காலையில் பாராளுமன்றத்துக்கு வந்தனர். காலை 10.30 மணியளவில் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே ஒன்று கூடினார்கள்.
அப்போது பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலையில் பரபரப்பு நிலவியது.