மகள் திருமணத்திற்கு மறுத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
1 min read
Frustrated by daughter’s refusal to marry: Sub-Inspector commits suicide by hanging
18.8.2025
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). இவரது மனைவி சரளா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனந்தன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஆனந்தனின் மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, மூத்த மகளுக்கு திருமண செய்ய பெற்றோர் முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்ய எற்பாடு செய்துள்ளனர். ஆனால், திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிய ஆனந்தனின் மூத்த மகள் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட பெற்றோர், உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவம்னையில் அனுமதித்தனர். இளம்பெண்ணுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகள் திருமணத்திற்கு மறுத்து தற்கொலை முயற்சி செய்ததால் ஆனந்தன் மிகுந்த மன உளைச்சல் மற்றும் விரக்தியில் இருந்தார். அவர் நேற்று மதியம் கொளத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்கு உறங்க சென்றுள்ளார். ஆனால், மாலை வெகுநேரமாகியும் ஆனந்தன் படுக்கையறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம்ப்பக்கத்தினர் உதவியுடன் அறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் உள்ள மின்விசிறியில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.