குலசை தசரா விழாவில் சாதி கொடி கொண்டு வர தடை
1 min read
Ban on bringing caste flags during Kulasai Dussehra celebrations
2.9.2025
இந்தியாவில் கர்நாக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இத்தகையை சிறப்புபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். தொழில், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்க வேண்டி பக்தர்கள் வேடமணிந்து காணிக்கை வசூலித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த நிலையில் , குலசை தசரா திருவிழாவுக்கு இரும்பு ஆயுதங்கள் கொண்டு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதியை வெளிப்படுத்தும் கொடிகள், ரிப்பன்கள்,உடை அணிந்து வர கூடாது . மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முடிவுசெய்யப்பட்டுள்ளது.