தமிழகத்தின் உன்னத தியாகி வ.உ.சி
1 min read
Tamil Nadu’s great martyr V.O.C.
6.9.2025
தமிழகத்தில் உன்னதமான சுதந்திர போராட்ட தியாகி என்றால் அது கப்பலோட்டிய தமிழன் வ. உ சிதம்பரனார் தான். இன்று அவருடைய பிறந்த நாள்.
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை என்னும் வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதன், பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை என்னும் தனது பெயரை “வந்தே மாதரம் சிதம்பரம்பிள்ளை” என்று மாற்றிக்கொண்டார்.
அவரது தந்தை உலகநாதன் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். எனவே அவரின் வழியில் இவரும் வழக்கறிஞரானார். சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் வழக்குகளை மட்டும் வாதிடுவர்.
திலகர் போன்ற தேசவிடுதலை போராளிகளை கண்டு ஈர்க்கப்பட்டு 1905 இல் இந்திய காங்கிரஸ்ல் தன்னை இணைத்து கொண்ட இவர் ஆங்கிலேயர்களுக்க எதிராக போராட துவங்கினார்.
மிகச்சிறந்த தனது அறிவாற்றலால் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இவரது வாழ்க்கை பயணம் முழுவதும் சுந்திர போராட்டமாகவே விளங்கியது.
வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் “சுதேசி பிரச்சார சபை“, “தர்ம சங்க நெசவு சாலை“, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்“, “சுதேசிய பண்டக சாலை“, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.
ஆங்கிலேயர்களின் எதிராக தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். “பிரிட்டிசு இந்திய சுடீம் நேவிகேசன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். அதன் விளைவாக வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். பிறகு, “எஸ். எஸ் கார்னியோ” “எஸ். ஏஸ் காவோ” என்ற இரு கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களின் எதிர்ப்பை காட்டினார். இவரின் செயலை கண்டு கோபமடைந்த ஆங்கில அரசு இவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தி இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபடியே இவர் தனது எழுத்து பணியை தொடர்ந்தார்.
1908 ஆம் ஆண்டு வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தியது மற்றும் சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஃபின்ஹே எழுதிய வரிகளே இவை.
சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது. உள்ளம் தளரவில்லை. சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித்தமிழும் கண்ணீரைப் போக்கியது.
திருமணம்
வ. உ. சி. யின் திருமணம் 1895-ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் உடன் நடைபெற்றது. வள்ளி அம்மையார் 1900 -ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் இறந்து விட்டார்.
வ. உ. சிதம்பரம் அவர்களின் திருமண அழைப்பிதழ்
பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.
வ.சி.சி தனது 64 வது வயதில் 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி உயிர்துறந்தார்.