July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது

1 min read

Beedi leaves worth ₹1 crore seized while being smuggled to Sri Lanka; youth arrested.

22.7.2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் லோடு வாகனத்தை திருச்செந்தூர் பகுதியில் பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலந்தலை அருகில் உள்ள செந்தூர் நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் செந்தூர் நகர் கடற்கரை பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது, ஒரு லோடு வேனில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தலா 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட குரும்பூர், குரங்கன் தட்டு, பழைய தெருவைச் சேர்ந்த ராஜா மகன் சூர்யா (வயது 26) கைது செய்யப்பட்டுள்ளார். கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், லோடு வாகனம் மற்றும் இந்த கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபரையும் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *