June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர் கோவிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்: பக்தர்கள் கருத்து கேட்பு

1 min read

Break darshan at Tiruchendur temple for Rs. 500: Devotees seek feedback

6.9.2025

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில்தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது இயல்பாகவே எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என்ற 2 முறை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை கொண்டுவர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக சட்டசபை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு எண் 206-ல் பக்தர்கள் பெருவாரியாக வரும் கோவில்களில் தினசரி ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தரிசனம்) ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டண சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதில் தைப்பூசம் (5 நாள்), மாசித்திருவிழா (10 நாள்), பங்குனி உத்திர திருவிழா (3 நாள்), சித்திரை வருட பிறப்பு (1 நாள்), வைகாசி விசாகம் (5 நாள்), ஆவணி திருவிழா (5 நாள்), நவராத்திரி உற்சவம் (5 நாள்), கந்த சஷ்டி திருவிழா (10 நாள்), அமாவாசை, பௌர்ணமி (வருடத்துக்கு 24 நாள்) என மொத்தம் 68 நாட்களும், நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்களிலும் பிரேக் தரிசனம் கிடையாது.

இதுகுறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருப்பின் கோவில் இணை ஆணையருக்கு பக்தர்கள் எழுத்து பூர்வமாக செப்டம்பர் 11-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தின் பிரேக் தரிசன முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் கோடிக்கணக்கில் வருவாய் வரும் நிலையில் ரூ.500 கட்டண தரிசன முறையை அமல்படுத்துவது தேவையற்றது என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *