இத்தாலியில் சாலை விபத்தில் 4 இந்தியர்கள் பலி
1 min read
4 Indians killed in road accident in Italy
7.10.2025
இத்தாலியின் சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மடேரா நகரின் ஸ்கான்சானோ யோனிகோ பகுதியில் ரெனால்ட் ஸ்கெனிக் வகை கார் ஒன்று, சரக்கு லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான காரில் மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.