கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல்
1 min read
Karur stampede: BJP files petition in Supreme Court seeking CBI probe
7.10.2025
புதுடெல்லி,அக்.8-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.