பொங்கல் பண்டிகை: ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
1 min read
Pongal festival: Ticket bookings for trains begin
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ரெயில்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.