June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

1 min read

Our brother’s warning that day – First Minister M.K. Stalin’s recording

16.11.2025
திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ‘திமுக 75 அறிவுத்திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்களின் 58 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முற்போக்கு புத்தகக்காட்சியில் அனுமதி இலவசம் ஆகும். இந்த கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் 8.30 மணி வரையும் நடந்தது. இந்த கண்காட்சியில் புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுப்படியில் வழங்கப்பட்டது.

ஒரு வார காலம் நடைபெற்ற சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி இன்றுடன் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, ‘Carry on, but remember’ எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி மற்றும் அவரது திமுக தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *