சபரிமலை பக்தர்களுக்கு அமீபா எச்சரிக்கை- அறிவுறுத்தல்
1 min read
Amoeba warning-instructions for Sabarimala devotees
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மூளை தின்னும் அமீபா என அழைக்கப்படும் அமீபிக் மெனிஙோ என்செபாலிடிஸ் என்ற நோய் பரவி வருகிறது. இதற்கிடையே, சபரிமலையில் இவ்வாண்டு மண்டல–மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்து செல்லவுள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கொண்டும், பல அறிவுறுத்தல்களை அந்த மாநில சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
“கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்.சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஆறுகள், குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருகவும். மலை ஏறும் போது மெதுவாக இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.