நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடிப்பு
1 min read
Nilgiris: House built on elephant trail demolished
17.11.2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தனியாக ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கூட்டமாக வரும் காட்டு யானைகள் சில மணி நேரத்தில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்று விடுகிறது. தனியாக வரும் காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களை தாக்குவது, பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. அவற்றை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, சிலர் காட்டு யானை வழித்தடத்தில் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமித்து கட்டும் கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து, மாவட்ட நிர்வாகம் வீட்டின் உரிமையாளருக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர், வீட்டை இடிக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, கூடலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோர் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டை வீட்டை ஜேசிபி கொண்டு இடித்து அகற்றினர்.