பஹல்காம் தாக்குதல் குறித்து 1597 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்
1 min read
1597-page chargesheet filed in Pahalgam attack case
16.12.2025
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம் பள்ளாத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரை ஓட்டியை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செய்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, மே 7 ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவதாக தளங்களை தாக்கி அழித்தது.
மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4இல் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகாமையான NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
1597 பக்க குற்றப்பத்திரிகை ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆறு நபர்கள் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
பயங்கரவாதியாகக் கருதப்படும் சஜித் ஜாட்டைத் தவிர, ஜூலை 29 அன்று ஸ்ரீநகரின் டாச்சிகாமில் இராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 22 அன்று கைது செய்யப்பட்டனர்.