சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பை முடக்கிய மத்திய அரசு
1 min read
Central government halts Sahitya Akademi Awards announcement
20.12.2025
தமிழ் உட்பட இந்திய மொழிகளில் படைக்கப்ட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாகித்ய அகாடமி என்பது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விருது பெற்றவர்களின் பட்டியலை நிர்வாகக் குழு அங்கீகரித்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அரசு பிரதிநிதிகள் சாகித்ய அகாடமி அதிகாரிகளுக்கு விருது வென்றவர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய சாகித்ய அகாடமி உறுப்பினர் ஒருவர் “நிர்வாகக் குழு பரிசு பெற்றவர்களின் பட்டியலை அங்கீகரித்த பிறகு, அரசாங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்தனர். பரிசு பெற்றவர்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்” என்று தெரிவித்தார்
புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருது செயல்பாடுகளை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.